முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை..!

இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் இன்று (26) இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.



இதன் போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.



முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேற்படி அமைச்சின் மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.