முகநூலில் வரும் செய்திகளுக்கு நடவடிக்கை எடுக்க முயலும் வடக்கின் புதிய கலாசாரம்..!

யாழ் மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்ட ” கிழக்கு ஆளுநரின் 24 மணித்தியால பொது மக்கள் சேவை வடக்கில் இடம்பெறுவதில்லை” என்ற முகநூல் பதிவை அடிப்படையாக வைத்து வட மாகாண ஆளுநரின் செயலாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு இன்று(30) குறித்த ஊடகவியலாளரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.



வாக்குமூலம் வழங்கிய பின்னர் கருத்து தெரிவித்த குறித்த ஊடகவியலாளர்,

பொலிசாரால் வழங்கிய அழைப்புக் கடிதத்தில் முறைப்பாடு என்ன என்பதும் முறைபாட்டாளர் யார் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்படவில்லை.



வாக்குமூலம் வழங்குவற்கு முன்னர் ஆளுநரின் செயலாளரின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட கடிதப் பிரதியை பொலிசார் எனக்கு காண்பித்தனர்.

எனது முகநூலில் பதிவிட்ட கிழக்கு மற்றும் வடக்கு ஆளுநரின் செயற்பாடுகளை ஒப்பிட்டு எழுதிய பதிவை ஆளுநரின் செயலாளர் வடமாகாண பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாட்டுக்காக வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் என்னிடம் வாக்குமூலத்தை கேட்ட நிலையில் கருத்தை சுதந்திரம் அடிப்படை உரிமை ஒரு ஊடகவியளாளர் என்ற ரீதியில் வடக்கு ஆளுநரினால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை கிழக்கு ஆளுநருடன் ஒப்பிடும் அளவில் போதாது என்ற விடயத்தை கூறினேன்.



எனது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்தம் நோக்கிலும் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த நோக்கிலும் ஆளுநரின் செயலாளர் செயற்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையிலும் உண்மைத் தன்மையினை அறியாது அதிகார வரம்பிற்கு வெளியே செயற்பட்ட இதுபோன்றதொரு சம்பவம் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.