வவுனியா நகரப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டு; சந்தேக நபர் கைது..!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாடசாலையில் இடம்பெற்ற இவ் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றுமுன்தினம் (14.01.2024) காலை 10.00 மணியளவில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.



பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளையும் பொலிசார் பரிசோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது கடந்த வெள்ளிக்கிழமை (12.01.2023) மதியம் 3.29 மணியளவில் ஒருவர் தொலைக்காட்சியினை தூக்கிக் செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது.



சிசிரிவி காட்சியின் உதவியுடன் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் குறித்த தொலைக்காட்சியினை விற்பனைக்கு வழங்கியமை தெரிய வந்ததையடுத்து, 8 மணிநேர நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.

வவுனியா சுந்தரபுரம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.



கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.