வெடுக்குநாறி ஆலய பூசகர் கைது; தீர்வின்றித் தொடரும் பொலிஸாரின் அத்துமீறல்கள்..!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்ப்பாடுகளை முன்னெடுத்த ஆலய பூசகர் உட்பட இருவரை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.



இந்நிலையில் குறித்த பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதையடுத்து, ஆலய நிர்வாகத்தினால் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதனை நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலயவிடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.



இதனைதொடர்ந்து ஆலய பகுதியில் சிவாராத்திரி தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இன்று முன்னெடுக்க ஆலயத்தை நோக்கி பயணித்தவேளையில் ஆலய பூசாரி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்த வருடம் உத்தரவு வழங்கியிருந்தது.



அந்த உத்தரவை நேற்று முன்தினம் நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை மீறி பொலிஸார் குறித்த இருவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.