வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்கள் சிறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்..!

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் போலிக் குற்றச்சாட்டினைச் சுமத்திக் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரில் ஐவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் (12.03.2024) வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து தமக்கு நீதிகோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.



கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரை வன்முறையினைப் பிரயோகித்து கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களை கடந்த ஒன்பதாம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் (12.03.2024) ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.



இந்நிலையில் நேற்று(12) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதன் பின்பு எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு நபர்களில் ஐவர் நேற்று(12) காலை தொடக்கம் தொடர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.



திலகநாதன் கிந்துஜன், சுப்பிரமணியம் தவபாலசிங்கம், ஆலய பூசகர் மதிமுகராசா, துரைராசா தமிழ்ச்செல்வன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய ஐந்து பேரும் நேற்று (12.03.2023) முதல் உணவின்றி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.