விசாரணைக்கு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு ஊடகவியலாளர்..!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு இன்றைய தினம் (13) சென்ற அளம்பில் காவல்துறையினர் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர்.



பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராட்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக திருச்செல்வம் திவாகர், எதிர்வரும் 15 ஆம் திகதி இல.149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ, கொழும்பு – 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்தில் முன்னிலையாக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் இது தொடர்பான கடிதம் திவாகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளியுமாவார்.



பல ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அலுவலகராக கடமையாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உப தலைவராகவும் சுயதீனமான ஊடகவியலாளராகவும் இருந்து வருகின்றார்.