தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை குழப்ப பலர் சதி – சபா.குகதாஸ்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ள நிலையில் அதனை குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின் நிகழ்ச்சி நிரல்களில் தமிழ்த் தரப்பில் சிலர் சதி முயற்சியில் இறங்கியுள்ளனர்.



அரசுடன் இணைந்துள்ள தமிழ் முகவர்கள் வழமை போன்று அரசுக்கு சார்பாக பொது வேட்பாளர் விவகாரத்தை விமர்சிப்பதை தாண்டி தமிழ்த் தேசியக் கட்சிகளில் இருப்பவர்களும் வேறு சிலரும் மறைமுக அரசின் மற்றும் வெளிச் சக்திகளின் முகவர்களாக மாறி எதிரான கருத்துக்களை ஊடகப் பரப்பில் முன் வைத்து வருகின்றனர்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களது கருத்து பொது வேட்பாளர் விடையத்தில் ராஜபக்சாக்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார்.



இவரைப் போன்று ஒரு சிலர் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முன்பாக உரியவர்களின் அனுமதி இன்றி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பது போன்ற சதிகளில் குதித்துள்ளனர்.



தமிழர் தரப்பு எவ்வகையான தீர்மானங்களையும் எடுத்தாலும் அதனை தென்னிலங்கையில் சிங்கள பேரினவாதம் இனவாதமாக மற்றும் பிரிவினைவாதமாக பார்க்கும் என்பதற்காக ஒற்றுமையாக வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவை அதற்கான சந்தர்ப்பத்தை தவற விட முடியாது.

விமர்சனங்கள், சதிகளை கடந்து அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்தார்.