வெடுக்குநாறி மலையில் நெருப்பாம்; தொல்பொருள் திணைக்களத்தினர் கூறிய கதை..!

கடந்த சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (16) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விசாரணைக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், ஆலயத்தின் செயலாளர் மற்றும், கைது செய்யப்படடிருந்த இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.



விசாரணை தொடர்பில் ஆலய செயலாளர் கருத்து வெளியிடுகையில்,

நாங்கள் தொல்லியல் இடங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினர் சில ஆவணங்களை வழங்கியிருந்தனர்.

குறிப்பாக மலை உச்சியில் தீ மூட்டப்பட்டதையடுத்தே எம்மை கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார்கள்.



“நாங்கள் அதனை எரித்தமைக்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப் படவில்லை. தீ மூட்டியதாக தொல்பொருள் துறையினர் புகைப்படம் ஒன்றைக் காட்டினார்கள். அந்தப் புகைப்படம் முதல் நாள் இரவில் அங்கு காவல் கடமைகளில் இருந்த நெடுங்கேணி காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு.

அதற்கான சான்றுகளை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அந்த புகைப்படத்தினையே இன்றைய தினம் அவர்கள் இங்கு சமர்பித்திருந்தார்கள். அது முற்றிலும் பொய்யானது. அதனை நாம் சுட்டிக் காட்டினோம்” என ஆலய செயலாளர் தெரிவித்துள்ளார்.



அதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் நெடுங்கேணி பொலிசார், மற்றும் வனவளத் திணைக்களத்தினரும் அழைக்கப்படவுள்ளனர் என்பது் குறிப்பிடத்தக்கது.