டயானா கமகே விரைவில் கைது செய்யப்படும் சாத்தியம்..!

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே மிக விரைவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

டயானா கமகே வௌிநாடு செல்வதற்கான தடையுத்தரவு ஒன்று இன்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் திலிண கமகேவினால் வழங்கப்பட்டிருந்தது.



அதற்கு மேலதிகமாக இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக அறிய முடிகின்றது.



டயானா கமகேவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பின் பிரதி உத்தியோகபூர்வமாக கிடைத்த பின்னர், அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறையிட குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதேவேளை நீதிமன்ற தீர்ப்புக்கமைய, இதுவரைகாலம் டயானா கமகே பெற்ற எம்.பிக்கான ஊதியம், இராஜாங்க அமைச்சருக்கான ஊதியம், கொடுப்பனவுகளை அவரிடமிருந்து அறவிடவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்னொரு தரப்பு சட்ட ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.