யாழில் காவல்துறை உத்தியோகத்தரின் வாகனத்தில் போதைப் பொருள் வர்த்தகம்..!

யாழ்ப்பாணத்தில் காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சரணடைந்த சந்தேக நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளரான காவல்துறை உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சகோதரரான பிறிதொரு காவல்துறை உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார்.



கடந்த வாரம், யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் கொடிகாமம் காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்து 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. இதன்போது, அதைக் கொண்டு வந்தவர் தப்பிச் சென்றிருந்தார். சில தினங்களில் பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் காவல்துறையில் சரணடைந்திருந்தார்.

அதனையடுத்து, குறித்த சந்தேக நபரின் வங்கி கணக்கை பரிசீலித்த போது பெரும் தொகை பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதோடு, குறித்த சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மன்னாரில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரது எனவும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



அதனையடுத்து, மோட்டார் சைக்கிள் உரிமையாளரான காவல்துறை உத்தியோகத்தரை கொடிகாமம் காவல்துறையினர் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியதோடு, 3 நாட்கள் காவல்துறை காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவும் அனுமதி பெற்றனர்.

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளை கடந்த 10 வருடங்களாக சுண்ணாகம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் தனது சகோதரனே பயன்படுத்தி வருவதாக கைதான காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தரை மீண்டும் நேற்று நீதிமன்றில் முற்படுத்தியபோது நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. இதேவேளை சுண்ணாகம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.