வவுனியாவில் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமி தொடர்பில் வெளியான மருத்துவ அறிக்கை..!

வவுனியாவில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்றையதினம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.



குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், கடந்த 30 ஆம் திகதி குறித்த மாணவியின் சகோதரன், தாயின் புதிய கணவரான அரச ஊழியர் உள்ளிட்ட 16, 32, 53 வயதுடைய மூவரை வவுனியா காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

குறித்த மூவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.



குறித்த அறிக்கையில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கு தாயின் பொறுப்பற்ற ஒழுக்கச் சீர்கேடான செயற்பாடே காரணம் என சமூகமட்ட அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.