வவுனியாவில் சட்டவிரோத காடழிப்பை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு கிராம சேவகர் மிரட்டல்..!

காடழிப்பை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத் தளங்களிலும் தொடர்ச்சியாக அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் இன்று (25.04) வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம அலுவலர்களின் துணையுடன் இரகசியமாக காடழிப்பு இடம்பெற்று வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக் கிராம மக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அதனை தடுத்து நிறுத்தியதுடன், இது தொடர்பில் அரச அதிபரிடமும், பிரதேச செயலாளரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.



இதனையடுத்து, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், குறித்த பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தவருமான ஆசிரியருக்கு அதிகாலை தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய கிராம அலுவலர் ஒருவர் ஆசிரியருக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.

அத்துடன் போலி முகநூலின் ஊடக குறித்த ஆசிரியரின் படத்தை பதிவிட்டு அவதூறு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.



இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிடம் முறையிட்டுள்ளதுடன், வவுனியா பொலிசிலும் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.