வவுனியாவில் தொடர் அரச விடுமுறைகளைப் பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்படும் அரச காணிகள்..!

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (30-04-2023) இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளம் – குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி ஓரமாகவுள்ள நீரேந்து பிரதேசத்தை ஆக்கிரமித்து சில நபர்களால் கம்பி கட்டை போடப்பட்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீரேந்து பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றினை அண்மித்தே வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.



ஏற்கனவே, அப்பகுதிக்கு அண்மையாக ஒரு பெண் தனது வீட்டினை அண்மித்த காணித் துண்டம் ஒன்றினை வேலியிட்டு அடைத்த போது கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று வேலிகளை அகற்றியதுடன், அப் பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர்.



இருப்பினும், தற்போது, இரவோடு இரவாக குறித்த பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள போதும் உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.