பாடசாலை ஆசிரியர் மீது போலி அவதூறு; பாடசாலை சமூகம் போராட்டத்தில்..!

வவுனியா, தரணிக்குளம் கணேஸ் வித்தியாலத்தின் தமிழ்பாட ஆசிரியர் தொடர்பாக சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலியான தகவலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை பாடசாலைக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இதன் போது கருத்து தெரிவித்த பாடசாலை சமூகம், எமது பாடசாலையின் தமிழ்பாட ஆசிரியரான திருமகன் மீது அண்மைக் காலமாக தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு வருகின்றது. அதற்கு எமது எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் சமூகத்திற்கு ஏற்ப்பட்ட பிரச்சனை ஒன்றை தட்டிக் கேட்டதற்காக இழிவான முறையில் அவர் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.



அந்த விடயத்தை பாடசாலை சமூகம் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு குறித்த நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க வேண்டிய கட்டாய நிலமையில் நாம் இருக்கின்றோம்.



ஒரு தகவலின் உண்மைத் தன்மை தொடர்பாக ஆராயாமல் அதனை பலரும் பகிர்வு செய்தமையானது மோசமான ஒரு முன்னுதாராணத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே இனியாவது உண்மைத் தன்மையினை உணர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனக் கூறினார்.