ஒட்டுசுட்டானில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கத் தயாராகும் இராணுவம்..!

முல்லைத்தீவு 64 ஆவது படைப்பிரிவு முகாமிற்கு காணி சுவீகரிப்புக்காக இராணுவம் ஆவனங்களை கோரியுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (3) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.

 

இதில் கலந்து கொண்ட இராணுவ அதிகாரி ஒட்டுசுட்டான் நகர மையப் பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் 25 ஏக்கர் காணி, இரண்டு தனிநபர் காணிகள் மற்றும் இந்து மயானம் ஆகியவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள 64ஆவது படைப்பிரிவு முகாமுக்கான காணி ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.



அதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர், மக்களின் காணிகள், இந்து மயானம் என்பன விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டபோதும் அவை , இன்னும் விடுவிக்கப்படவில்லை.

எஞ்சியிருக்கும் அபகரிக்கப்பட்ட 25 ஏக்கர் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் தமது கருத்தினை இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில் அவர்களுடைய கருத்துக்குப் பின்னரே இவ்விடயம் தொடர்பாக முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.



இதேவேளை, பல காலமாக மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் மயானத்துக்கு பல மைல்கள் செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கிறோம்’ என இராணுவம் ஏமாற்றி வருகின்றனர் என கூறும் மக்கள், மயானத்தை விரைவில் விடுமாறு கோரியுள்ளனர்.