மன்னாரில் சிறுமிகளை கடத்த முயன்ற இருவர் விளக்கமறியலில்..!

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் சிறுமிகளை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் நேற்று (11) மாலை கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மீதும் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் (12) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதோடு, அன்றைய தினம் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு மன்னார் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.



இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி செ.டினேசன் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பாடசாலை சிறுவர்களை கடத்த முற்படுவதாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய தினம் (11) தலைமன்னார் பகுதியில் பாடசாலை செல்கின்ற மூன்று மாணவிகளை கடைகளுக்கு பொருட்களை விற்பனை செய்ய வந்த இரு முகவர்கள் சிறுவர்களுக்கு சொக்லேட் தருவதாக அழைத்ததாகவும் சிறுமிகள் அவர்களை கண்டு ஓடியதாகவும் முகவர்கள் அந்த சிறுமிகளை தேடியதாகவும் கடத்த முற்பட்டதாகவும் கூறப்படும் இரு நபர்கள் தலைமன்னார் பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த பின்னணியிலே குறித்த மூன்று சிறுமிகள் குறித்த வாகனத்தில் மூன்று நபர்கள் வந்ததாகவும் அந்த வாகனத்தில் வெளிநாட்டவர் ஒருவர் காணப்பட்டதாகவும் அவர்களுடைய முறைப்பாட்டில் தெரிவித்திருந்த போதும் ஊர் வாசிகளால் இரு நபர்கள் மாத்திரம் பிடிக்கப்பட்டு வாகனத்துடன் சேர்த்து தலைமன்னார் பொலிஸில் ஒப்படைக்கப் பட்டிருந்தனர்.



இதன் காரணமாக நேற்றைய தினம் (11) முழுவதும் தலைமன்னார் பகுதியில் பதட்டமான நிலை காணப்பட்டதாகவும் இந்த பின்னணியில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்த பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் சார்பாக சிறுமிகளை கடத்த முயல்வது தொடர்பாக முறைப்பாடு எங்கேயேனும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக பல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் சிறுவர்களை கடத்துதல் தொடர்பான பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அதன் நிமித்தம் இன்றைய தினம் (12) தலைமன்னார் பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்றாக முகங்களை மூடிய நிலையில் முற்படுத்திய போது அடையாள அணிவகுப்பு க்கு ஏற்ற விதமாக முற்படுத்திய நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு அழைக்கப்பட்ட அடுத்த கனமே மன்னார் பொலிஸார் மூன்று வழக்குகளை குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மூன்று வழக்கும் 2023/05/06 திகதி பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 11 வயது மாணவனை வெள்ளை வானில் சொக்லேட் தருவதாக தெரிவித்ததாகவும் கடத்த முயற்சித்த கவும் முறைப்பாடு மன்னார் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்தது.

அந்த முறைப்பாட்டுக்கும் சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட்டு இந்த இரு சந்தேக நபர்களும் அந்த வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையிலும் அடையாள அணிவகுப்புக்காக இரு சந்தேக நபர்களும் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.



அதன் பின்னர் 2023/05/08 திகதி ஓலைத்தொடுவாய் பகுதியில் 11 வயது சிறுமியை கடத்த முற்பட்டதாகவும் மன்னார் Y.M.C.A பகுதியில் சிறுமியை கடத்த முற்பட்டதாகவும் மேலும் இரண்டு வழக்குகளாகவும் மொத்தமாக சந்தேக நபர்கள் மீது 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வழக்கு தலைமன்னார் பொலிஸாராலும் மூன்று வழக்குகள் மன்னார் பொலிஸாராலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது வழக்கானது ஐந்தாம் மாதம் 22 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்பு உட்படுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்கின்ற சிறுவர்களை கடத்த முற்படுவதாக தகவல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றமையால் மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கும் வெளியே அனுப்புவதற்கும் மிகவும் அச்சமான சூழ்நிலை காணப்படுவதாகவும் ஆரம்பத்தில் வதந்தியாக பரப்பப்பட்ட விஷயம் தற்போது முறைப்பாடாக பதியப்பட்டு இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே குறித்த விடயத்தில் குறித்த சந்தேக நபர்கள் ஏன் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார்கள்.

இல்லை இவர்களுக்கு பின்னால் யாரும் இருக்கிறார்களா? உண்மையில் அவர்கள் சிறுவர்களை கடத்த முயன்றார்களா? என்பதையும் அதற்கு மூல காரணமாக உள்ள சந்தேக நபர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் இதற்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை பொலிஸார் அறிய வேண்டும் என சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.