A/L விடைத்தாள் மதிப்பீட்டை யூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டம்..!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை யூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

மேலும் 6 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன் ஏனைய பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.



நாடளாவிய ரீதியில் 10 மத்திய நிலையங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை அதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் மதிப்பீட்டின் போது செயன்முறை பரீட்சைகளுக்கு தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.



2022 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்றது.

பின்னர் விடைத்தாள் தொடர்பிலான மதிப்பீட்டுப் பணிகள் பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் இவ்வருட உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீடுகள் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *