மன்னார் பொது வைத்திய சாலையினை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கு மன்னார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்றினை நிறைவேற்றுவதற்கு முயற்சியெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரால் மிகக் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
குறிப்பாக அதிகாரப் பகிர்வு நோக்குடன் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கைளை மீளவும் மத்திய அரசிற்கு கையளிக்கும் இந்தச் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாதெனக் கூறியே நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிகரன் மற்றும், சத்தியலிங்கம் ஆகியோரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இருப்பினும் ரிஷாட் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் பொது வைத்திய சாலையில் வளப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அந்தவளப் பற்றாக்குறைகளைத் தீர்க்க மாகாண சபை அந்த வளப் பற்றாக்குறைகளத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டதுடன், குறித்த மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையை மத்திய அரசின்கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதனை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிகரன் மற்றும், சத்தியலிங்கம் ஆகியோர் மத்திய அரசின்கீழ் குறித்த வைத்திய சாலையை கொண்டு வர முடியாதெனவும், வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கு மாகாணசபையூடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமெனவும் தெரிவித்தனர்.
(விஜயரத்தினம் சரவணன்)
Recent Comments