கிளிநொச்சி காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. குறித்த உத்தரவு நேற்று (17) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராமசேவகரான தன்னை இளங்குமரன் தாக்கியதாக குறித்த கிராமசேவகர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேய நீதிமன்றம் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை தொடர்பு கொண்டு வினவியவேளை,
“கிளிநொச்சி காவல்துறையினர் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக எனக்கு தெரிய வந்த நிலையில் சட்டத்தரணி ஊடக அந்த வழக்கிற்கான முன் நகர்த்தல் பத்திரத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.
அந்த வகையில் அந்த வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, கிளிநொச்சி காவல்துறையினர் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் நீதிமன்றம் எனக்கு பணிப்புரை விடுத்தது.
காவல்துறையினர் என்னை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது என்ற தவறான செய்தி பரவுகின்றது, அது முற்றுமுழுதான பொய்” என அவர் தெரிவித்துள்ளார்.


Recent Comments