Thursday, January 22, 2026
Huisதாயகம்சட்டவிரோத கரைவலைத் தொழிலை கடந்தகால அரசே ஊக்கப்படுத்தியுள்ளது - ரவிகரன் எம்.பி

சட்டவிரோத கரைவலைத் தொழிலை கடந்தகால அரசே ஊக்கப்படுத்தியுள்ளது – ரவிகரன் எம்.பி

சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை மேற்கொள்வதற்கு கடந்தகால அரசுகளும், அமைச்சர்களும், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை அவ்வாறு சட்டவிரோத கரைவலை முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்புகளில் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தொடற்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டி, இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

அந்தவகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன்.

நிச்சயமாக இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எவராக இருப்பினும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மேலம் கடந்த கால அரசுகள் சட்டவிரோத கரவலை தொழில் முறையை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தி தவறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அவ்வாறு கடந்தகால அரசுகள் சட்டவிரோதமான கரவலை முறைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழிலாளர்களை அனுமதித்ததால் தற்போது அந்த கடற்றொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.

இவ்வாறான சட்டவிரோதமான கரைவலைத் தொழில்முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்திய கடந்தகால அரசுகளுக்கெதிராகவும், அமைச்சர்களுக்கெதிராகவும், இதனோடு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்த அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேவேளை இந்த அரசு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!