நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், பதவியில் இருக்கும் பிரதம நீதிபதியை இலக்காகக் கொண்டு வெளியான அறிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணி ஜகத் அபேயநாயக்க எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதிலளித்துள்ளது.
இன்று (11) திகதியிட்ட கடிதமொன்றில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நலின் டி சில்வா ஆகியோர், ஜகத் அபேயநாயக்கவின் கடிதம் சங்கம் முறையாகப் பரிசீலிப்பதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் வெளியானமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கக்கூடிய செயற்குழுக் கூட்டத்தில் ஜகத் அபேயநாயக்க கலந்துகொள்ளவில்லை என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பதவியில் இருக்கும் பிரதம நீதிபதியே அடுத்ததாக ஓய்வு பெறவுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பதுடன், அவர் 2026 டிசம்பர் முதலாம் திகதி ஓய்வு பெறவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், இரண்டு பிரதம நீதிபதிகள் உட்பட ஆறு உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் இன்றி ஓய்வு பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவின் காலப்பகுதி காரணமாக, பதவியில் இருக்கும் பிரதம நீதிபதியின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிப்பதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாக பொதுவெளியில் ஊகம் உருவாகியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தத் திருத்தம் வழக்கத்திற்கு மாறாக விரைவாக முன்னெடுக்கப்படுவதும் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தையும் பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, அரசியலமைப்பு மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய தரப்பினர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், எந்தவொரு நீதிபதிக்கும் எதிரான தீங்கிழைக்கும், அவதூறான அல்லது தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்களை ஆதரிக்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான முறையான விமர்சனம் மற்றும் பொது விவாதத்துக்கும், நீதித்துறையின் தனிப்பட்ட உறுப்பினர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு காணப்பட வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு தமது எதிர்ப்பு, நீதித்துறை சுதந்திரம், அரசியலமைப்புச் செயன்முறைகளின் ஒருமைப்பாடு மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது போன்ற கொள்கைகளின் அடிப்படையிலானது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் மிகுந்த கவனத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நிறுவன ரீதியான கலந்தாலோசனைகளுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பிட்ட தனிநபர்களுக்கு சாதகமாக அவை பயன்படுத்தப்படுகின்றன என்ற ஊகங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான ஜகத் அபேயநாயக்கவை, நிறுவப்பட்ட நிறுவன நடைமுறைகளின் ஊடாக இந்த விடயம் தொடர்பில் கலந்துகொள்ளுமாறு அழைத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், அவர் எழுப்பிய விடயங்கள் அடுத்த செயற்குழு மற்றும் சட்டத்தரணிகள் மன்றக் கூட்டங்களில் பரிசீலிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


Recent Comments