நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி மார்கரெட் சாட்டர்ஸ்வைட் (Margaret Satterthwaite), இலங்கையின் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
2026 ஆகஸ்ட் 7 ஆம் திகதியிட்ட இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இந்த முன்மொழியப்பட்ட திருத்தம், சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளான நீதித்துறை சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை ஆகியவற்றிற்கு அமைவாக இல்லாமலிருக்கலாம் என்று சாட்டர்ஸ்வைட் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பின் படி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 63 வயதிலும் ஓய்வுபெற வேண்டும். ஐ.நா. சிறப்பு அதிகாரியின் கூற்றுப்படி, இந்த வரம்பை முறையே 67 மற்றும் 65 ஆக இரண்டு ஆண்டுகள் உயர்த்த இத்திருத்தம் முன்மொழிகிறது.
இந்த திருத்தம் ஒரு நிர்வாக சீர்திருத்தமாக முன்வைக்கப்பட்ட போதிலும், இதன் துல்லியமான வரைவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இத்திருத்தம் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மட்டுமன்றி, தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் பதவிக் காலம் என்பது நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படைப் பாதுகாப்பாகும் எனக் குறிப்பிட்ட சாட்டர்ஸ்வைட், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இலங்கைக்கு உள்ள பொறுப்புகளை நினைவூட்டினார்.
தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை உடனடியாக நீடிப்பது, நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்ட மன்றத்தின் தலையீடுகள் குறித்த கவலைகளை எழுப்பக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
குறிப்பிட்ட எந்தவொரு நீதிபதியும் பயனாளிகளாக வெளிப் படையாக அடையாளம் காணப்படாது விட்டாலும், இந்த மாற்றங்கள் தற்போதைய குறிப்பிட்ட நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இடைக்கால ஏற்பாடுகள் மற்றும் பிற புறநிலைப் பாதுகாப்புகள் இல்லாதது, இந்தத் திருத்தமானது ஒரு பொதுவான அரசியலமைப்பு விதியை உருவாக்குவதை விட, உடனடி நிறுவன நோக்கங்களுக்காக நீதித்துறையின் அமைப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சேவை நீடிப்பினால் பயனடையும் நீதிபதிகள், பின்னைய நாட்களில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடியாகும் தன்மையை பரிசீலிக்க நேரிட்டால், அது நலன்களின் முரண்பாட்டிற்கு (conflict of interest) வழிவகுக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றங்களைச் செய்வது நீதித்துறை நிபுணத்துவம் மற்றும் நிறுவனத் தொடர்ச்சியைப் பேணுதல் போன்ற சில சூழ்நிலைகளில் நியாயப்படுத்தப்படலாம், ஆனால் அத்தகைய சீர்திருத்தங்களுக்கு அர்த்தமுள்ள கலந்தாய்வு, வலுவான பாதுகாப்புகள் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் அவற்றின் தாக்கம் குறித்த கவனமான பரிசீலனை தேவை என்று சாட்டர்ஸ்வைட் வலியுறுத்தினார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான எந்தவொரு திருத்தமும் வெளிப்படையான, உள்ளடக்கிய, நடுநிலையான, கலந்தாய்வு மற்றும் விரிவான நீதிச் சீர்திருத்தச் செயன்முறை மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

முன்மொழியப்பட்ட திருத்தத்தின் தற்போதைய வரைவு மற்றும் நிலை, அதன் பின்னணி மற்றும் தற்போது சேவை செய்யும் நீதிபதிகளுக்கு மாற்றத்தைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு ஐ.நா. சிறப்பு அதிகாரி இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிறைவேற்று அல்லது சட்டமன்றத் தலையீட்டிற்கு எதிரான பாதுகாப்புகள், நீதித்துறை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), சட்ட வல்லுநர்கள், சிவில் சமூகம் மற்றும் கல்வியாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுகள் பற்றிய தகவல்களையும் அவர் கோரியுள்ளார்.
சிறப்பு அதிகாரியின் கடிதம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பதில்கள் ஆகியவை ஐ.நா.வின் தகவல்தொடர்பு அறிக்கையிடல் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்றும், பின்னர் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recent Comments