வவுனியாவை வனாந்தரமாக்கவல்ல சீனித் தொழிற்சாலை திட்டத்தை கைவிடுங்கள் – விக்கி கோரிக்கை

வவுனியாவில் கரும்புப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும், சீனித் தொழிற் சாலையை அமைப்பதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி ஜனாதிபதியும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்,

எனவே ஒருகாலத்தில் வவுனியா மாவட்டத்தை வனாந்தரமாக்கக் கூடிய இச் செயற்திட்டத்தை நடைமுறைப் படுத்தவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.



அக்கடிதத்தில்,

வவுனியாவில் கரும்பு வளர்ப்பதும், சீனித் தொழிற்சாலை அமைப்பதும் வடமாகாணம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாடும் பொருளாதார செழிப்பை அனுபவிப்பதற்கு வழிவகுக்காது.

நான் முதலமைச்சராகப் பதவிவகித்த போது, வடமாகாணத்தில் பாரியளவிலான கரும்பு பயிரிடல் செயற்திட்டம் எமது பரிசீலனைக்கு வந்தது.

இருப்பினும் கிடைக்கப்பெற்ற தரவுகள் மற்றும் செயற்திட்ட அறிக்கையைப் பரிசீலித்ததன் பின்னர், அச்செயற்திட்டம் வடக்கு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் என்பதால், அதனை நிராகரித்தோம். தற்போது இச்செயற்திட்டம் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளது.

சீனித் தொழிற்சாலையை அமைப்பதற்கான 500 ஏக்கர் காணியுடன் சேர்த்து மொத்தமாக 72,000 ஏக்கர் நிலப்பரப்பு இச் செயற்திட்டத்துக்கான ஒதுக்கப்பட்டுள்ளது.



செழித்து வளர்வதற்குப் பெருமளவான நீர் தேவைப்படும் பயிர்களில் ஒன்றான கரும்பு ஓர் நீண்டகாலப் பயிராகும் (18 மாதங்கள்). அதன்படி ஒரு ஹெக்டேயர் காணியில் பயிரிடப்படும் கரும்புக்கு வருடமொன்றுக்குத் தேவையான நீரின் அளவு 2000mm – 3000mm எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது வடமாகாண உலர்வலயம் தண்ணீர் பஞ்சத்துக்கு முகங் கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண நீர்வளத்தை வற்றச் செய்யக்கூடிய செயற்திட்டத்தை எதற்காக நடைமுறைப்படுத்த முற்படுகின்றீர்கள்?

வவுனியாவும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களும் ஏற்கனவே குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளன.

பாரிய ஏரிகள், நதிகள், நீர்நிலைகள் இல்லாத வவுனியாவிலும் அதனைச்சூழவுள்ள பகுதிகளிலும் இருந்து கரும்புப்பயிர்ச் செய்கைக்குத் தேவையான பெருமளவு நீரை எவ்வாறு பெறப் போகின்றோம்? அப்பகுதிகளிலிருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டால், வெகுவிரைவில் வவுனியா மாவட்டம் வனாந்தரமாகிவிடும்.



அதேபோன்று இங்கு கரும்புப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் பட்சத்தில், தென்னை, நெல் உள்ளிட்ட ஏனைய அனைத்துப் பயிர்களும் நீரின்றிப் பாதிப்படையத் தொடங்கும். எனவே இப்பிரதேசத்தின் இயற்கைச்சூழல் வெகுவாகப் பாதிப்படையும்.

அதுமாத்திரமன்றி மகாவலி செயற்திட்டத்தைப்போன்று, இக் கரும்புப் பயிர்ச்செய்கை செயற் திட்டமும் தமிழர்களின் பாரம்பரிய வதிவிடங்களில் சிங்களக் குடியேற்றங்களை எளிதாக நிலைபெறச் செய்வதற்கு வழிகோலும்.

இதன் மூலம் மக்கட்பரம்பல் மாற்றமடையும். ஆகவே இச் செயற்திட்டம் எதிர்வருங்காலத்தில் தமிழ் மக்களின் நல்வாழ்வை வெகுவாகப் பாதிக்கும். நீங்கள் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கைப் பெறவேண்டுமேயானால், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடுங்கள் என்று விக்கினேஸ்வரன் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.