கடன் வீதங்கள் குறைப்பு; வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பணிப்பு..!

உரிமம் பெற்ற வங்கிகள் கடன் வீதங்களை போதுமான அளவு குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

அண்மையில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது, வங்கி மற்றும் நிதித் துறையின் நிர்வாக நடவடிக்கைகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க இலங்கை மத்திய வங்கிக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.



இதுவேளை, இலங்கையின் பணவீக்கம் இந்த மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என மத்திய வங்கி வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் புதிய மத்திய வங்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, வங்கிக்கு சுயாதீனமாக செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு விலை மற்றும் நிதி அமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தற்போது அதிக சுதந்திரத்துடன் மேற்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.



நிதிக் கொள்கைக்கும் பணவியல் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளதாகவும் நந்தலால் வீரசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், புதிய மத்திய வங்கிச் சட்ட நடைமுறை மூலம் இந்த மாத இறுதிக்குள் ஒற்றை இலக்க பணவீக்கத்தை எட்டுவதற்கான பாதையில் மத்திய வங்கி பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *