யாழில் சிறையிலிருந்த அலெக்ஸ் உயிரிழப்பு; பொலிஸார் மீது குற்றச்சாட்டு..!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கமைய விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மீது உறவினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.



தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே இன்றையதினம் (19.11.2023) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாட்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

அதனால் சந்தேக நபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.



உயிரிழந்தவர் சிறைச்சாலையில் இருந்த போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.