புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறை அவசியம் – ஜே.வி.பி தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றிலேயே துர்ப்பாக்கிய ஆண்டாக இருந்தது.

69 இலட்சம் வாக்குகளை பெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவாகி 20ஆவது திருத்தச் சட்டத்தை கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்றி இருந்தார்.



20ஆவது திருத்தச்சட்டத்தில் சகல அதிகாரங்களையும் தம்வசப்படுத்தி கொண்டு பாராளுமன்றத்தில் கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் அவர் கொண்டிருந்தார்.

ஆனால், மக்கள் புரட்சியால் அவர் மாத்திரமல்ல அனைத்து ராஜபக்சர்களும் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

அவர்களுடைய நாய்க்குட்டியாக இருந்த நரி குட்டி, இன்று ஆட்சி பீடத்துக்கு வந்துள்ளது. இந்த நரி அரசியலில் தந்திமான நடவடிக்கைகளிலேயே கடந்த 45 வருடமாக ஈடுபட்டு வருகிறது.

எனினும் அந்த நரியை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் சக்தியினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டினுடைய தேசிய பிரச்சினை என்பது 75 வருடங்களாக இருக்கின்றது. இந்த பிரச்சினைக்கு காரணம் யாரென பார்த்தால் அதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள்தான்.

அதாவது கடந்த கால ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழ் கட்சிகள் உடந்தையாக இருந்துள்ளன. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி நாட்டில் ஆட்சி செய்யவில்லை.



இவ்வாறான பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் தீர்வினை எதிர்பார்க்கின்றார்கள். தலைநிமிர்ந்து தன்மானம் உள்ள தமிழனாக வாழ வேண்டும் என்ற தேவை தமிழ் மக்களுக்குள்ளது.

அதற்காக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். யுத்தம் தோல்வி அடைந்திருக்கின்றது. ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டங்களும் தோல்வி அடைந்திருந்தன.

நாங்களும் இரண்டு தடவைகள் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்தப் போராட்டத்தில் தோல்வியடைந்தோம். எமது இளைஞர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் என்பது தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு நிலைமையினை உருவாக்கும்.

இந்த நாட்டில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒரு குடையின் கீழ் அணி திரளா விட்டால் இந்நாட்டில் விமோசனம் இல்லை என்ற கொள்கை தேசிய மக்கள் சக்தியிடம் தொடர்ந்து உள்ளது.



இந்த பிரச்சினைக்கு நீண்டு நிலைக்க கூடியவாறு தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் கருத்துக்களும் ஒன்று சேர்ந்து புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு 45 வருடங்களாகும். ஆனால் பிரச்சினை அதே இடத்தில்தான் இருக்கின்றது. இருந்த போதிலும் கூட தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். மாகாண சபை மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது தமிழ் மக்களுக்கான தீர்வாகும்.

முதலில் நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வுக்காக புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வரை இந்த மாகாண சபையினை தொடர்ந்து பேண வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.” எனத் தெரிவித்தார்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்