வடக்கு, கிழக்கு தமிழ் சிறுவர்கள் மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தல்..!

இந்த நாட்டில் இருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அந்த பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



பொலிஸ் ஊடகப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட தமிழ் சிறுவர்கள் மலேசியாவிற்கு அனுப்பப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த சிறுவர்கள் இந்நாட்டில் இருந்து மலேசியா செல்வதற்கு சட்டபூர்வ கடவுச்சீட்டை பயன்படுத்துவதாகவும், மலேசியாவில் போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.



இந்த முறையில், இந்த நாட்டிலிருந்து சுமார் 13 சிறுவர்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் இடைத்தரகர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணைகள் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.