மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இன்று (25) மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைக்கோவை 106 ஆம் பிரிவின் கீழ் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு அடம்பன் காவல்துறையினர் இன்று (25) மன்னார் நீதிமன்றத்தில் கோரி இருந்தனர்.



குறித்த வழக்கு இன்று(25) மன்னார் நீதிமன்றத்தில் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ முன்னிலையில் இடம்பெற்றதுடன் இந்த வழக்கில் சுமார் 20 தனி நபர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட 20 பேருடைய பெயர்கள் குறிப்பிட்டு 21 வது நபர்களாக ஏனைய பொது மக்கள் என பெயர்கள் குறிப்பிடப்பட்டு குறித்த கட்டளையினை கோரி இருந்தனர்.



இதன்போது குறித்த நினைவேந்தலை அமைதியான முறையிலும், அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் நினைவு கூர மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான இலச்சினைகள், மற்றும் கொடிகளைப் பயன்படுத்தாது, அமைதியான முறையில் நினைவு கூர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. என சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்தார்.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்