கிளிநொச்சி வருமானத்தை மன்னாருக்கு ஒதுக்கவே முடியாது; தடுத்து நிறுத்தப்படும் – டக்ளஸ்

பளை காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் பெரும் தொகை பணம் மன்னாருக்கு செல்லவுள்ளதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் விசேட கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பளை காற்றாலை உற்பத்தி நிலையத்தினால் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி மன்னாருக்கும், பளைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பளை காற்றாலை உற்பத்தி நிலைத்தில் கிடைக்கு வருமானம் இந்த மாவட்டத்துக்கே உரித்துடையது. அதில் மன்னாருக்கு ஒருபகுதியை வழங்கும் முடிவை எடுத்தது யாரென தெரியவில்லை.



இது தொடர்பில் உடனடியாக உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும். மன்னாரில் பெரிய காற்றாலையொன்று அமைக்கப்பட உள்ளது.

மன்னாரில் காற்றாலை தேவை இல்லை என்றவர்களே இந்த பணத்தையும் எதிர்பார்க்கின்றனர்.



இதில் பிரதேசவாதம் இல்லை. அங்கு காற்றாலை அமைவதற்கு சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் இங்குள்ள பணத்தை எவ்வாறு அங்கு செலவழிப்பது.” எனத் தெரிவித்தார்.