பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை அகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உள்ள அபாயகரமான கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்வி வலயங்களில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கம்பஹா மற்றும் மினுவாங்கொடை வலயங்களில் உள்ள அத்தகைய பாடசாலைகளின் பட்டியலை உடனடியாக வலயக் கல்வி அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தினார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நேற்று (11) நடைபெற்ற கம்பஹா கல்விக் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.



இவ்வாறான பாடசாலைகளை இனங்கண்டு, அடுத்த வருட ஆரம்பத்திற்குள், முன்னுரிமை அடிப்படையில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கம்பஹா கல்வி கோட்டத்திலுள்ள 21 பாடசாலைகளுக்காக உருவாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பட்டயப் பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மினுவாங்கொடை கல்விப் பிரிவிலுள்ள 35 பாடசாலைகளுக்கான பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்துள்ளது.

இங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

நான் மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது கல்வி அமைச்சராகவும் பணிபுரிந்தேன். அப்போது பல வெற்றிகரமான திட்டங்களை செயல்படுத்தினோம். இந்தப் பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டம் இருக்கவில்லை.

எனவே, எமது அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டு மினுவாங்கொடை பாடசாலைகளுக்கான அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தோம். இதன் காரணமாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்தன.



பொதுவாக இதுபோன்ற திட்டத்தை உருவாக்க சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவாகும். எனவே தான் இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையை தொடர்பு கொண்டோம். கம்பஹா கல்விப் பிரிவில் 48 பாடசாலைகள் உள்ளன. தற்போது 21 பாடசாலைகளுக்கு இந்தத் திட்டங்களைத் தயாரித்துள்ளோம்.

கம்பஹாவிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் விரைவில் இந்தத் திட்டங்களைச் செய்வோம் என நம்புகிறோம். அடுத்த வருடம் பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது பாடசாலைகள் தாங்கள் பெறும் பணத்தை அதிகம் பயன்படுத்த முடியும்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் “எமது பாடசாலை – எமது கரங்களால் காப்பாற்றுவோம்” என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் மினுவாங்கொடையில் உள்ள 17 பாடசாலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கும் சிறிய திருத்தப்பணிகளுக்கும் பணம் கொடுத்தோம். எதிர்காலத்தில் கம்பஹா பிரதேசத்தில் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.



நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம் கம்பஹா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கான சோலார் பெனல் நிறுவும் வேலைத்திட்டமும் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. மினுவாங்கொடை கல்விப் பிரிவில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. கம்பஹா கல்விப் பிரிவிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன, மேல்மாகாண சபைத் தலைவர் சுனில் விஜயரத்ன, கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளர் அனுர பிரேமலால், கம்பஹா கோட்டக் கல்விப் பணிப்பாளர் பிரியந்தி நாணயக்கார, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) என். ஏ. எஸ். என். நிஸ்ஸங்க உள்ளிட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கம்பஹா பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. .