மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வந்த பெண்ணின் நூதன வர்த்தகம் அம்பலம்..!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் மிகவும் நூதனமான முறையில் செய்து வந்த போதைப்பொருள் வர்த்தகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு-15 மட்டக்குளி பெர்குசன் வீதியிலுள்ள தனது வீட்டில் உள்ள அம்மிக்கல்லின் கீழ் இரகசியமாக தோண்டப்பட்ட குழிக்குள் மறைத்து வைத்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்.



சந்தேக நபரான அப் பெண்ணிடம் இருந்து 1310 போதைப்பொருள் குளிசைகளை கைப்பற்றியுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

பதில் காவல்துறை மாஅதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.



மேல் மாகாண ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி அப் பெண்ணின் வீட்டில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வோருக்கு தலா நூறு ரூபாய்க்கு போதைப்பொருள் விற்பனை செய்து வருவது விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.



கைது செய்யப்பட்ட 56 வயதுடைய சந்தேகநபரான அந்தப் பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.