தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

தாதியர் பயற்சி நெறிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்களை நடத்தி அவர்களை தாதியர் பயிற்சியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, 2019/2020 க.பொ.த உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களுக்கான மாணவர் தாதியர் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு 13 ஜனவரி 2024 முதல் பெப்ரவரி 18ஆம் திகதி வரை நடத்த சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.



இந்த நேர்காணல்கள் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர் பாடசாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 4000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.



இது தொடர்பான மேலதிக தகவல்கள் (டிசம்பர்) சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://www.health.gov.lk/) இம்மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும், 27ஆம் திகதிக்குப் பின்னர் விண்ணப்பதாரர்கள் தேவையான விவரங்களைப் பெறலாம் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



தற்போது நாடளாவிய ரீதியில் 45,000க்கும் அதிகமான தாதியர்கள் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகின்றனர். நாடளாவிய ரீதியில் 17 தாதியர் பயிற்சிப் பாடசாலைகளில் 6500க்கும் மேற்பட்ட தாதியர் மாணவர்கள் பயிற்சி நெறிகளில் ஈடுபட்டுள்ளனர்.