தேர்தலுக்காக நாடு திரும்பும் பசில்; சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்..!

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாளையதினம் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு, அவர் மீண்டும் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பசில் ராஜபக்ச, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்தார். இந்த நிலையில், நாளையதினம் அவர் நாடு திரும்பவுள்ளதாக மொட்டு கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



அவர் நாடு திரும்பியதன் பின்னர், ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இதேவேளை மொட்டுச் சார்பில் வேட்பாளராக பிரபல வர்த்தகர் ஒருவர் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.