மக்கள் எழுச்சிப் போராட்டமே ஒரே வழி; விரைவில் வவுனியாவில் – வேலன் சுவாமிகள்

எமக்கான நீதியினை அடைவதற்கு வடகிழக்கு தழுவிய மக்களின் எழுச்சிப் போராட்டமே ஒரே வழி என்று சிவகுரு ஆதீனமுதல்வர் வேலன் சுவாமிகள் அறைகூவல் விடுத்துள்ளார்.

வெடுக்குநாறிமலை வழக்கை பார்வையிடுவதற்காக இன்று வவுனியா வருகைதந்த அவர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.



தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை பொலிசாரின் அடாவடி அளவு கடந்து செல்கின்றது. கைது செய்யப்படுவதற்கான எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் பொய்யான வகையில் தொல்பொருட் திணைக்களத்தால் நீதிமன்றிற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அத்துமீறல்களை செய்தது முழுதும் தொல்பொருட் திணைக்களத்தினரே.



கைது செய்யப்படவர்கள் சீரான உணவின்றி வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். அவர்களது உறவினர்கள் படும்பாட்டை பார்க்கும் போது வார்த்தைகள் வரவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நாம், ஜனநாயக ரீதியிலான ஒரு மக்கள் எழுச்சிப் போராட்டத்தினை வடக்கு, கிழக்கு தழுவிய வகையிலே விரைவில் ஒன்று திரண்டு ஏற்படுத்த வேண்டும். அதனூடகவே எமக்கான நீதியை நிலைநாட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.



எனவே வடக்கு, கிழக்கின் அனைத்து உறவுகள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு ஜனநாயக ரீதியிலான பேரெழுச்சிப் போராட்டம் ஒன்று வவுனியா நகரில் விரைவில் நடாத்தப்படும். அதற்கு அனைவரது ஆதரவினையும் வேண்டி நிற்கின்றோம் என்றார்.