அரச விடுதியில் மது அருந்திய வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு..!

வடக்கு மாகாணத்தில் இருந்து சென்ற கல்வி அதிகாரிகள் இரத்மலானை அரசாங்க விடுதியில் மது அருந்திய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை 13 அரச அதிகாரிகளுக்கு வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ள எந்த ஒரு அலுவலகத்திலும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ரூபினி வரதலிங்கம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.



குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

இவ் விடயம் தொடர்பான தங்களது NP/03/02/GA/1/Inquiry ஆம் இலக்க 2024.04.08 ஆம் திகதிய கடிதம் தொடர்பானது,

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக் கோவையின் இரண்டாம் அத்தியாயத்தின் 13 ஆம் பிரிவிற்கமைய ஆரம்ப புலனாய்வு என்பது” எவரேனும் அரச அலுவலர் அல்லது அலுவலர்கள் துர்நடத்தையொன்றில் ஈடுபட்டதாக சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கும் போது, அல்லது அது பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பிலான உண்மையான விபரங்களை வெளிப்படுத்துவதற்காக வேண்டிய அடிப்படை காரணிகளை தேடுதலும், சம்பந்தப்பட்ட நபர்களின் கூற்றுக்களையும் பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசீலனை செய்வதுமாகும்.



இதனடிப்படையில் மாகாண கல்வி பணிப்பாளரினாலோ குறித்த சம்பவத்திற்குரிய விசாரணைகள் எவையும் இது வரைகாலமும் மேற்கண்டவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

மேலும், மாகாண கல்வி பணிப்பாளர் அவர்களின் NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உத்தியோக பற்றற்ற விசாரணை என்பதன் ஊடாக குறிப்பிடப்படுவது யாது என்பதும் விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.

மாகாணக் கல்வி பணிப்பாளரின் NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதிய கடிதமானது எமக்கு பிரதியிடப்படவில்லை என்பதுடன் எமக்கு அறிக்கையிடப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையினை தாபன விதிக்கோவையின் இரண்டாம் அத்தியாயத்திற்கமைய மேற்கொண்டு அதனது அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.



மேலும் மாகாண கல்வி பணிப்பாளரினால் செயலாளர், கல்வி அமைச்சிற்கு முகவரியிடப்பட்ட, NP/20/Inquiry/2023 ஆம் இலக்க 2023.02.20 ஆம் திகதி கடிதத்தில் முதலாவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 13 ஆண் உத்தியோகத்தர்களும் உரிய அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் எமது அலுவலகத்தின் கீழ் இயங்கும் எந்தவொரு வதிவிடத்தினுள் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் ஆளுநரின் செயலாளர், ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம். மாகாண கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி திணைக்களம், மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் என்பவற்றிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.