யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி; அதிகாரிகளால் மறைக்கப்படும் உண்மைகள்..!

யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த 15 வயது பாடசாலை மாணவி தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அத்துடன், மாணவி தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த வார இறுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் 15 வயது பாடசாலை மாணவியொருவர் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் அன்று இரவு குறித்த பாடசாலை மாணவி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து, பிறந்த நிலையில் குழந்தையை விட்டு விட்டு குறித்த பாடசாலை மாணவியும் அவரது தாயாரும் வைத்தியசாலையை விட்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.



இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு முறைப்பாடு வழங்கிய நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், தப்பியோடிய பாடசாலை மாணவி இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

குறித்த மாணவியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய சந்தேகநபர் யார் என்ற தகவல் வெளிவராத நிலையில், மாணவி தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் பாடசாலை மாணவி வடமராட்சி கல்வி நிலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்றதாக தகவல்கள் வெளியாகியதோடு, இதுவரை கல்வி திணைக்கள அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் பெறவில்லை என குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.