இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு..!

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியை தாபிப்பதற்காகவும், மத்திய வங்கியில் தற்பொழுது காணப்படும் பணச்சட்டத்தை நீக்குவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாக இது முன் வைக்கப்பட்டுள்ளது.



புதிய சட்டமூலத்திற்கு அமைய இலங்கை மத்திய வங்கியின் தன்னாட்சிக்கு எல்லா நேரங்களிலும் மதிப்புக்கொடுத்தல் வேண்டும் என்பதுடன், ஆள் எவரும் அல்லது உருவகம் எதுவும், மத்திய வங்கியின் ஆளுநர் ஆளும் சபையினதும் பணக் கொள்கை சபையினதும் வேறு உறுப்பினர்கள் அல்லது மத்திய வங்கியின் ஊழியர்கள் இச்சட்டத்தின் கீழ் தமது தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதிலும், புரிவதிலும், நிறைவேற்றுவதிலும் அவர்களினதும் ஏதேனும் செல்வாக்கைச் செலுத்துதலோ அல்லது மத்திய வங்கியின் செயற்பாடுகளுடன் தலையிடுதலோ ஆகாது.



அத்துடன், உள்நாட்டு விலை நிலையுறுதியை எய்துவது, பேணுவது, நிதிசார் முறைமையின் நிலையுறுதியை உறுதிப்படுத்திப் பேணுதல் என்பன மத்திய வங்கியின் ஆரம்பக் குறிக்கோள்கள் ஆகும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அத்துடன், மத்திய வங்கியின் அலுவல்களினது நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் மேல் நோக்குகின்றன மற்றும் பணக் கொள்கை தவிர மத்திய வங்கியின் பொதுக் கொள்கையைத் தீர்மானிக்கின்ற பொறுப்புடைய ‘ஆளும் சபை’ ஸ்தாபிக்கப்படும். இதன் தலைவர் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பதுடன், துறைசார் நிபுணத்துவம் கொண்ட ஆறு பேர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.