மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும் – ஜனக ரத்நாயக்க

எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின்கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இலங்கை மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைக்கு அமைய மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மின் பாவனையாளர்களினால் ஏற்றுக் கொள்ள கூடிய நியாயமான முறையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என மின்பாவனைகள் தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சட்டத்திற்கு முரணான வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.



மின்கட்டண அதிகரிப்பு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்றம் சிறந்த ஒரு தீர்மானத்தை அறிவிக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இலங்கை மின்சார சபை செயற்படுவது முறையற்றது.

எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளோம். எரிபொருள் விலை குறைப்பின் பயனை மின்கட்டண திருத்தம் ஊடாக மின் பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும்.



உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையின் வீழ்ச்சி, டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி உயர்வு ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு மின்கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். இலங்கை மின்சார சபை சிறந்த ஒரு தீர்மானத்தை எதிர்பார்க்கிறோம் என்றார்.