கிளிநொச்சியில் பாடசாலை மாணவியின் குடிநீர் போத்தலுக்குள் சிறுநீர் கழித்தது யார்?

கிளிநொச்சி நகரிலுள்ள முன்னணி கலவன் பாடசாலையொன்றில் மாணவியொருவரின் குடிநீர்ப் போத்தலில் சிறுநீர் கலந்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், கடந்த 9ஆம் திகதி நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சிறுநீர் கலந்திருப்பதை அறியாத மாணவி அதனை பருகியுள்ளார். நீரை பருகிய போது அதில் வித்தியாசத்தை உணர்ந்த மாணவி சந்தேகமடைந்து, குடிநீர் போத்தலை ஆசிரியையிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார்.



தனது குடிநீரின் நிறம் மாறியுள்ளதுடன், குடிநீர் அளவும் அதிகரித்திருந்ததாக மாணவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆசியை குடிநீரை விரலால் தொட்டு தனது நாக்கில் வைத்து பரிசோதித்தார்.

அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொதுச்சுகாதார பரிசோதகருக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட சோதனையில், குடிநீர் போத்தலில் சிறுநீர் கலந்திருந்தது தெரிய வந்துள்ளது.



அதேவேளை மாணவர் தலைவராக செயற்படும் மாணவியொருவர், வகுப்பறையில் மிக கண்டிப்பாக செயற்படுபவர் என்றும், அவரது கண்டிப்பினால், மாணவர்கள் சிலர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாணவிகள் பாடமொன்றுக்காக வகுப்பறைக்கு வெளியில் சென்றபோதே யாரோ அவரது போத்தலில் சிறுநீரை கலந்து வைத்திருக்ககூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.



மாணவர் தலைவி வெளியிலிருந்து மீண்டும் வகுப்பறைக்கு திரும்பிய பின்னர், தனது குடிநீர் போத்தலில் இருந்த தண்ணீரை குடித்தபோதே இந்த சம்வம் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தரம் 10 இல் படிக்கும் மாணவியொருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.