Sunday, March 8, 2026
Huis Blog Bladsy 78

கொட்டாஞ்சேனை மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா? CCTV காணொளிகள் ஆய்வு

0

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம் பெறுகின்றன.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்லும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் பரிசோதனைக்காக மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்ததன் பின்னர், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் மக்களால் 15வது நாளாகத் தொடரும் போராட்டம்..!

0

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (17) 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் (17) ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் பங்கேற்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களும் மத தலைவர்களும்,அருட் சகோதரிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.

இன்றைய தினம் (17) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

32 வயது ஆசிரியையை கர்ப்பமாக்கிய யாழ் பல்கலை மாணவன் உயிர்மாய்க்க முயற்சி..!

0

திருமணமாகாத நிலையில் கர்ப்பமாகிய 32 வயது ஆசிரியை ஒருவர் தனது கர்ப்பத்திற்கு காரணமான 23 வயதான யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் கற்கும் வவுனியா மாணவனை, தன்னைத் திருமணம் செய்யக் கோரி அழுத்தம் கொடுத்த காரணத்தால் குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை வவுனியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஆசிரியை ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றில் தங்கி கல்வி கற்பித்து வந்துள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் சென்று வரும் போது யாழ் பல்கலைக் கழக மாணவனுடன் பஸ்சில் நட்பாகியதாகத் தெரிய வருகின்றது. இந்த நட்பு பின்னர் தவறான நட்பாக மாறி ஆசிரியை தற்போது 5 மாத கர்ப்பமாகியுள்ளார்.

இதனையடுத்து ஆசிரியை குறித்த மாணவனை தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததாகத் தெரிய வருகின்றது.

இது தொடர்பாக குறித்த மாணவனின் பெற்றோரிடமும் ஆசிரியை நியாயம் கேட்டு வந்ததுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தன்னைத் திருமணம் செய்யாது விடின் பொலிசாரின் உதவியை நாட போவதாக மாணவனை அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்தே குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிய வருகின்றது.

தற்போது மாணவன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவமானது வடக்குப் பகுதியில் இடம்பெற்றள்ளது.

மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற ஆசிரியை மாணவனுடன் வைத்தியசாலை விடுதியிலும் தனது கணவர் என்று கூறி சர்ச்சைகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் மாணவனின் உறவுகள் கடும் கோபத்தில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தபால் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து..!

0

இன்று (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ. எம்.ஆர்.பி. சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இணைந்து நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

0

யாழ் நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு உள்ளதாக யாழ், மாநகர சபை முதல்வருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பினால் , ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த தொலைபேசி அழைப்பு விஷமி ஒருவரின் விஷமத்தனமான செயற்பாடு என யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட நபர் ஒருவர் நல்லூர் ஆலயத்திற்கு வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் முதல்வர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடமையில் உள்ள பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , பொலிஸ் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுளள்னர்.

அத்துடன் ஆலய சூழலில் உள்ள வீதி தடைகளுக்கு அருகில் சோதனை கூண்டுகள் அமைத்து , பொதிகளுடன் வருவோர் மற்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் வருவோரை பொலிஸார் சோதனை செய்தனர்.

அதேவேளை , முதல்வருக்கு வந்த வெடிகுண்டு எச்சரிக்கை தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிர்வாக முடக்கத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு..!

0

எதிர்வரும் திங்களன்று (18) வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட உள்ள நிர்வாக முடக்கத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கையொப்பமிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை, இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது.

பொது மக்களைப் பாதுகாக்க வேண்டிய படைகள் தாமே சட்டமும் ஒழுங்கும் இழந்து இப்படிப்பட்ட கொடூரச் செயல்களைச் செய்வது, இந்த நாட்டின் சட்ட அமுலாக்கத்தின் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது.

இப்படிப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்வதில் அரசின் இயலாமை, அல்லது விருப்பமின்மை, பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, நிரபராதிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.

இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவெனில் அரசாங்கம் இஸ்ரேலிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு வழங்கும் போக்காகும்.

இவர்கள் பலர் காசாவில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுப்பினர்களே.

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள நிர்வாக முடக்கத்தை முழுமையாக ஆதரிக்க எங்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

இது நீதி, பொறுப்புகூறல், மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவு கோரும் அமைதியான எதிர்ப்பாகும்.

வடகிழக்கில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும், திங்கட்கிழமை 18 ஆம் திகதி குறைந்தபட்சம் காலை நேரத்தில் தங்கள் கடைகள் மற்றும் தொழில்களில் இருந்து விலகியிருப்பதன் மூலம் இந்த ஒற்றுமை போராட்டத்தில் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வன்முறையை நிராகரித்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கதவடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் – வலி. மேற்கு தவிசாளர்

0

அனைத்து தரப்பினரும் கதவடைப்புக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலே காலாகாலமாக இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் காணப்படுகிறது.

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியான விசாரணைகள் நடைபெறவுமில்லை, அதற்கான ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இது இவ்வாறு இருக்கையில் சென்றவாரம் முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டிலே ஒரு குடும்பஸ்தரின் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த குடும்பஸ்தர் ஏதாவது தவறு இழைத்திருந்தால் கூட அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்து அவருக்கெதிரான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தண்டிப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

அவரது மரணத்திற்கு காரணமான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தே காணப்படுகிறது. இந்த பிரச்சினை தென்னிலங்கையில் ஏற்பட்டால் அங்கு பாரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.

அண்மைக்காலமாக அகழப்படும் செம்மணி மனிதப் புதைகுழியில் 150ற்கு அண்மித்ததான மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான சர்வதேச விசாரணைகள் இடம்பெறுமா அல்லது அந்த விடயங்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படுமா என்ற சந்தேகம் எங்களுக்கு காணப்படுகிறது.

400 தொடக்கம் 600 பேரை கொலை செய்து புதைத்ததாக கிருசாந்தி கொலை வழக்கு குற்றவாளியான இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ளார்.

அந்தவகையில் முத்துஐயன்கட்டு கொலை சம்பவத்தையும் இந்த இராணுவமே செய்துள்ளதாக எமக்கு வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. இனியும் இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டிலே இடம்பெறக் கூடாது என்பதற்காகவும், இராணுவ அதிகரிப்புக்கு எதிராகவும் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

எனவே வர்த்தக சங்கம், உணவகங்கள், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் போன்ற அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த கதவடைப்புக்கு ஆதரவு தரவேண்டும் என தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை ஆட்சேபிக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம்..!

0

2021 ஆம் ஆண்டு கொழும்பு கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம், இலங்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஆட்சேபித்துள்ளது.

அதன்படி, கப்பல் பேரழிவுக்கு 1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்ற உத்தரவையே இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு நியாயமற்றது எனவும் உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கப்பலின் தலைவரையும், நிறுவனத்தின் உள்ளூர் முகவர்களையும் விசாரணைகள் முடிவதற்கு முன்பே நீதிமன்றம் தண்டித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே சுற்றுச்சூழலுக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் உதவும் நியாயமான முடிவுகளை வழங்குமாறு கப்பல் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

2021ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற சரக்குக் கப்பல் தீப்பிடித்து கொழும்புக்கு அருகே மூழ்கியது, இதனால் பிளாஸ்டிக் துகள்கள் சிதறி இலங்கையில் மிக மோசமான கடல் மாசுபாடு ஏற்பட்டது.

இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுத்தம் செய்வதற்கும் கடற்றொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் 150 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வனத்துறையின் நடவடிக்கையால் விவசாயிகள் கடும் அச்சம்..!

0

வனவளத் திணைக்களத்தின் அண்மைய செயற்பாடுகளால் விவசாயிகள் அச்ச நிலையில் இருப்பதாக வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வனவளத்திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தாலும் வவுனியாவை பொறுத்தவரை அவ்வாறு எந்தகாணியும் விடுவிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.

அத்துடன் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத காணிகள் இனிமேல் மக்களுக்கு கிடைக்காது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் காடுகளாக இருக்கும் தமது காணிகளை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், வனவளத் திணைக்களம் அந்த பணியை செய்ய தடை போடுகின்றது அவ்வாறு செய்பவர்களையும் கைது செய்கின்றது.

இந்த நிலை தொடர்ந்தால் எவ்வாறு மக்கள் தமது காணிகளை துப்புரவாக்குவது இதனால் விவசாயிகளும் மற்றும் மக்களும் அச்சநிலையில் உள்ளனர்.

இதற்கு ஒரு நீதியான முடிவினை அரசு வழங்க வேண்டும், சில காணிகளுக்குள் கிணறுகள் உள்ளது அவ்வாறான காணிகளையும் புணரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்பவில்லை, அவர்களது வீடுகளை மூடி காடுகள் வளர்ந்துள்ளதுடன் அந்த காணிகள் தொடர்பாக கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தி கடிதம் வழங்கினாலும் வனவளத்திணைக்களம் அதனை ஏற்க மறுக்கின்றது.

பலர் காணிகளுக்கான அனுமதிபத்திரத்தையும் வைத்துள்ளனர் ஆனால் அது செல்லுபடியாகாது என்று கூறுகின்றனர்.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு அரசாங்கம் நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மைய நாட்களில் வடக்கு ஆளுநரின் வவுனியாவிற்கான கள விஜயத்தின் போது வனவள திணைக்களத்தின் ஒருதலைப் பட்சமான செயற்பாடுகள் தொடர்பில் மக்களால் ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் பல செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தகக்கது.

கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பைப் புறக்கணியுங்கள் – சச்சிதானந்தம்

0

தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய சச்சிதானந்தம் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை சைவர்கள் குறிப்பாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

கடை அடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடை அடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம்.

முல்லைத்தீவில் இளைஞன் இதந்த சம்பவத்துக்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் கஞ்சா குடித்து போதையில் நீரில் வீழ்ந்து இறந்ததே என மதுத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பன தாக்கம் அல்லது அடக்கு முறைதான்.

மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்னர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து கடை அடைப்பு என கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வாழ்வே பாதிக்கும்.

அந்த வகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்துசார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்க கூடாது.

தோல்வியில் முடிந்த போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த போராட்டங்கள் அவசியமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!