Sunday, June 22, 2025
Huis Blog

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வடக்கில் ஆரம்பம்..!

0

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி நெலும் பியசவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22.06.2025) நடைபெற்றது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 287 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா, க.இளங்குமரன், ம.ஜெகதீஸ்வரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மாவட்டச் செயலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் தனது வரவேற்புரையில்,

ஜனாதிபதி நிதியத்தின் நிதி கடந்த காலத்தில் தவறான வகையில் பயன்படுத்தப்பட்டதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தாம் இதைச் சரியான வகையில் செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சபாநாயகர் அவர்கள் தனது பிரதம விருந்தினர் உரையில்,

ஜனாதிபதி நிதியத்தின் ஊடான சேவைகள் வழங்கலில் கடந்த காலங்களில் பாரபட்சம் இருந்தது. அத்துடன் மக்கள் கொழும்பை நோக்கி வரவேண்டியிருந்தது. அது மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவத் தேவைக்காக மாத்திரமல்ல கல்வி உள்ளிட்ட ஏனையவற்றுக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்தே உதவி வழங்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மாணவர்களுக்காக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் 150 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் தீர்மானித்திருக்கின்றோம், என்றார்.

செம்மணி போராட்டத்திற்கு ஆதரவாக மட்டுவில் போராட்டம் முன்னெடுக்க அழைப்பு..!

0

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளை(23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் ஒரு சில நாட்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தை முன்னிட்டு செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் அத்தோடு தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி சம்பந்தமாகவும் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையாக யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒரு போராட்டத்தினை அடையாளமாக நாளைய தினம் மாலை 6 மணிக்கு மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் -கோட்டைக்கல்லாறு பாலத்தில் அருகாமையில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இந்தப் போராட்டத்திற்கு எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக ஒரு அழைப்பை விடுகின்றோம்.

நாளைய தினம் மாலை 6 மணிக்கு தீப்பந்தங்கள் ஏந்தி பாலத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக இருக்கின்றோம்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இந்த போராட்டம் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்த மூன்று நாட்களில் நடைபெற இருக்கின்றது.

யாழ் மாவட்டத்திலே அந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக வலுச்சேக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த விடயத்திற்கான பூரணமான ஆதரவும் இந்த விடயத்தை ஆராய வேண்டும் என்று நாங்களும் விரும்புகின்றோம் என்கின்ற செய்தியை சொல்வதற்காக இந்த மாபெரும் போராட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம். என தெரிவித்தார்.

நாளை செம்மணியில் போராட்டம்; சிறீதரன் விடுத்த அழைப்பு..!

0

யாழ்.செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் அம்சங்கள் எந்தவித ஆடைகளுமின்றி அடித்து நொறுக்கப்பட்ட குழந்தைகள் வயது வந்தவர்கள் போன்றோர் உடையது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் 1995 ஆம் தொடக்கம் 2001 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாண மண்ணில் காணாமல் ஆக்கப்பட்ட பலபெயருடையதாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திலே சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பலரது உடல்களும் குறித்த புதைகுழியிலே உள்ளதாக மக்களுக்கு சந்தேகம் எழுகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே மக்களின் சந்தேகத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அநுர கட்சிக்கு பேரிழப்பு; திடீரென பதவி விலகிய பிரதி அமைச்சர்..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.

இந்த பதவி விலகல் ஜூன் 20 முதல் நடைமுறைக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றினார்.

அதன்படி, பிரதி அமைச்சரின் பதவி விலகலை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக் கொண்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மலசலகூடத்திற்கு அருகில் மயங்கிக் கிடந்த 14 வயது மாணவி; இளைஞன் கைது..!

0

பண்டாரவளையில் பாடசாலை மாணவி ஒருவர், கழிவறைக்கு அருகில் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி, கடந்த 12 ஆம் திகதி பாடசாலை முடிந்ததும் வீடு திரும்பவில்லை, என அவரது தாயார் ஒரு ஆசிரியைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து இது குறித்து விசாரித்ததன் பின் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் சிறுமியின் தாயாருடன் சேர்ந்து, பாடசாலை வளாகத்தில் தேடிய போது, அந்த மாணவி கழிப்பறைக்கு அருகில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

ஆசிரியரும் மாணவர்களும் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மயக்கமடைந்த மாணவி, தனது பாடசாலை தோழியுடன் பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும் கழிப்பறைக்குச் சென்ற போது, முகத்தை முழுமையாக மூடியிருந்த பாடசாலை சீருடையும் அணிந்திருந்த ஒருவனும், மற்றுமொருவர் தனது முகத்தை மறைத்ததாகவும், பின்னர் தான் மயக்கமடைந்ததாகவும் மாணவி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அந்த சந்தர்ப்பத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்தத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை போதனா மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த தடயவியல் மருத்துவர், அவர் எந்த துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லை என்று குறிப்பிட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் மயூரன் தெரிவு..!

0

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த ப.மயூரனும் உப தவிசாளராக தமிழரசு கட்சியை சேர்ந்த இ.ஜெயகரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

அதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ப.மயூரன் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வேறு யாரும் போட்டியிடாதமையால் மயூரன் தவிசாளராக ஏக மனதாக தெரிவாகியுள்ளார்.

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை; காவல்துறை மா அதிபருக்கு பறந்த கடிதம்..!

0

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகள் மேற்கொள்ளுமாறு தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் காவல்துறை மா அதிபருக்கு அவர் மனு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச மனிதாபிமான சட்டமீறல் ஆகும்.

தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகிய நான் இந்த மனுவை மதிப்பிற்குரிய உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த மக்களை கொன்றது கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறலை குறிக்கின்றது.

இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர் நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுக்கள்.

இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது. இலங்கை காவல்துறை உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.

யாழில். போதை மாத்திரைகளுடன் கைதான மாணவர்கள் நன்னடத்தைக்கு..!

0

சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதான மூன்று மாணவர்களையும் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று மாணவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை மூவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து அவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி , மருத்துவ சான்றிதழ்களை பெற்று , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , மூவரையும் , சிறுவர் நன்னடத்தை பிரிவினர் ஊடாக நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , தான் ஐஸ் போதை பொருளை வாங்குவதற்காக மாணவர்களுக்கு மாத்திரை விற்று வருவதாக தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனி ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பயணமானார் ஜனாதிபதி அநுர..!

0

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டார்.

ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில், ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் உள்ளிட்ட இரு தரப்பு ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளன.

இதன் போது ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத்துறைசார் தொழிற் சங்கங்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

வவுனியாவில் 22 இடங்களில் தன்சல்கள்; நீண்ட வரிசையில் மக்கள் உணவிற்காக காத்திருப்பு..!

0

பௌத்தர்களின் விசேட தினமான பொசன் தினத்தை முன்னிடடு இன்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம், வனவளத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு, தொலைத் தொடர்பு திணைக்களம் உள்ளிட்ட 22 இடங்களில் தன்சல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குளிர்பானம், ஐஸ்கிறீம், கடலை, சீனிசம்பல் பாண் , பிரியாணி, என பல்வேறு உணவுப் பண்டங்கள் தன்சல்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.

விசேட நிகழ்வாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் 3000 பேருக்கு பிரியாணி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில மதத்தலைவர்கள், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயமுனி சோமரட்ண, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக் கொடி, பொலிஸ் அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை பெருமளவான மக்கள் தன்சல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவை பெற்றதையும் அவதானிக்க முடிந்தது.

error: Content is protected !!