இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டு 3,28,400 உயிருடன் பிறந்த குழந்தைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2024 இல் அது 2,20,761 ஆகக் குறைந்து 33% வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
இது பல தசாப்தங்களிலேயே மிகக் குறைந்த பிறப்பு வீதமாக குறிப்பிடப்படுவதுடன், அதிகாரிகள் இதை ஒரு கவலைக்குரிய நிலையாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிறிய குடும்ப விருப்பம், தாமதமான திருமணங்கள், மற்றும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் பழக்கம் ஆகியவை நீண்டகாலமாகவே குறைவுக்குக் காரணமாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி இணைந்து, திருமணங்களையும் கர்ப்பங்களையும் தாமதப்படுத்தியதால் பிறப்பு வீதம் மேலும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம்(4)பூநகரி பகுதியில் கடமையில் இருந்த பொழுது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறித்த பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இரண்டுபொலிஸ் உத்தியோகத்தர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திய பொழுது அவர்கள் அன்று கடமைக்குச் செல்லும் பொழுது 2000 ரூபாய் பணம் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் பரிசோதனையின் போது மொத்தமாக 7040 பணம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், 5040பணம் மேலதிகமா இருந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட திருக்கோயில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் அண்மைக்காலமாக வெளிநபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறையினரோ, அரசாங்கமோ ஆக்கபூர்வமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதன் பின்னணி பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
2025.05.23 ம் திகதியன்று திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆலயடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியரும் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
திருக்கோவில் கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட மேலதிக செயலமர்விற்கு தொடர்ச்சியாக சமுகளித்திராத மாணவியொருவரின் வரவை உறுதிப்படுத்துவதற்காக, பாடசாலை அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, மாணவர் இடைவிலகலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டாய வரவு குழுவிற்கு பொறுப்பான ஆசிரியர், மாணவியின் வீட்டிற்கு தேடிச்சென்ற போது, குறித்த மாணவியின் மைத்துனரால் குறித்த ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிபர் மீதும் குறித்த நபரினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு, அதிபரின் மோட்டார் சைக்கிளும் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.
மேலும் – 2025.10.01 ம் திகதியன்று கல்முனை திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியின் பிரதி அதிபர், முகமூடி அணிந்த இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.
நவராத்திரி விழாவின் ஒரு அங்கமாக கும்ப ஊர்வலம் சென்ற மாணவிகளை அசௌகரியப்படுத்தும் வகையில் பெண் பிள்ளைகளை நெருங்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க சில இளைஞர்கள் முற்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் தங்களைப் புகைப்படம் எடுப்பதைத் தடுக்குமாறு மாணவிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, புகைப்படம் வீடியோ எடுக்க முயன்ற இளைஞர்களைத் தடுத்திருந்த பிரதி அதிபரின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதி அதிபரின் வீடுதேடிச் சென்ற முகமூடி அணிந்த இனந்தெரியாத நபர்கள் அவரை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.
நாட்டில் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக டுபாயிலும், இந்தோனேசியாவிலும் வைத்து பாதாள உலகக் குழுக்களை கைது செய்துள்ளதாக பிரசாரம் செய்துவரும் அரசாங்கம், சிறிலங்காவில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.
அரசாங்கம், தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை வெளியிட்டுள்ளது. இக்கொள்கை இலங்கையில் காணப்படும் சமூகவியல் பின்னணிகளை கவனத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டதா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.
மாணவர்களிற்கு அதிபர், ஆசிரியர்களினால் வழங்கப்படும் உளரீதியான தண்டனைகளுக்கு கூட சிறைத் தண்டனைகளையும் அபராதங்களையும் விதிக்கும் சட்டமூலத் திருத்தங்களை மேற்கொண்டுள்ள அரசாங்கம், பாடசாலை மாணவர்களையும் அதிபர், ஆசிரியர்களையும் பாதுக்காக்கத் தவறும் சிறிலங்கா காவல் துறையினருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய புதிய சட்ட மூலங்களை உருவாக்கத் தவறியுள்ளது.
மாணவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத சுதந்திரத்தை வழங்கும் சட்டமூலங்களை அரசாங்கம் உருவாக்குவதற்கு முன்னர், கட்டுக்கடங்காத சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்கும் குறித்த சட்டமூலங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சமூக சீரழிவுகளில் ஈடுபடும் நபர்களினால் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் சமூகம் பாதிக்கப்படும் விடயங்களுக்கும் தீர்வு வழங்க முன்வர வேண்டும்.
திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக நடைபெற்ற காட்டு மிராண்டி தனமான சம்பவங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
குறித்த விடயங்கள் தொடர்பில், அரசாங்கம் குற்றவாளிகளை கைது செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் சமூக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
கல்வி, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், உழைப்பு போன்றவற்றிற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு காலத்தில் பெயர் போனவர்கள். ஆனால் கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கம், தொலைபேசி பாவனை காரணமாக இளைஞர்கள் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றது.
எனவே அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
யாழ் – சங்கானை வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நடைபெற்ற நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அனைவருக்கும் தெரியும். ஒழுக்கமின்மையே இதற்கெல்லாம் காரணம். ஒழுக்கமானது குடும்பத்தில் ஆரம்பித்து, பின்னர் கிராமத்திற்கு பரப்பப்பட்டு, அது நாடு நோக்கி நகர வேண்டும். பழைய அரசாங்கங்களின் செயற்பாடுகளால் அவை தலை மாறி போயிருக்கின்றன.
கடந்த கால அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை அரசியல்வாதிகள் பெற்று கிளிநொச்சியிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி மதுபானசாலைகளை திறந்து இருக்கின்றார்கள். சாப்பாட்டுக் கடைகளை விட மதுபானசாலைகளே அதிகமாக இருக்கின்றன.
பெரிய ஒரு அரசியல் கட்சியின் ஆதாரவாளர்கள் ஒரு போதைப் பொருள் தொழிற்சாலையையே உருவாக்கும் அளவிற்கு போதைப் பொருட்களை கொண்டு வந்து தெற்கில் வைத்திருக்கின்றார்கள்.
இதனைக் கடந்த அரசாங்கங்கள் கண்டும் காணாமல் தான் விட்டிருந்தன. ஆனால் எமது ஜனாதிபதி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளார்.
இவ்வாறானவர்கள் உண்மையிலேயே 15-20 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கைது செய்யாமையால்தான் அவர்கள் போதைப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் அளவிற்கு திறமை பெற்றிருக்கின்றார்கள்.
ஒரு அரசாங்கத்திற்கு நிழல் அரசாங்கமாக செயல்படும் அளவிற்கு அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள்.
எனவே அவர்களை அடக்குவது எமது அரசாங்கத்தின் கடமை. அதனை நாங்கள் செய்வோம் என்றார்.
பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நேற்றைய தினம் வெள்ளிக் கிழமை (3) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் கடந்த வியாழக்கிழமை (2) மாலை போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரை பேசாலை பொலிஸார் துரத்திப் பிடித்ததோடு, இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பின்னர் குறித்த நபர் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (3) காலை குறித்த சந்தேக நபர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (3) காலை 6.30 மணியளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.
இதனை அடுத்து பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.
குறித்த சந்தேக நபர் பேசாலை பொலிஸ் நிலையத்தின் முதலாம் இலக்க தடுப்பு காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்த குறித்த நபரின் தாய் பேசாலை பிரதேச வைத்திய சாலைக்கு வெள்ளிக்கிழமை (3) காலை வருகை தந்து தனது மகனை பொலிஸார் அடித்து கொலை செய்துள்ளதாக அங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை – சேருநுவர பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப் பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து நேற்று (2) திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன.
இதனடிப்படையில் அவ்வழக்கின் சந்தேக நபரான சேருநுவர – தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டது.
வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணியாக தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகியிருந்தார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரி பாடசாலை 02.10.2025 மாணவர்கள் பாடசாலை முன் நுழைவாயிலைப் பூட்டி ஆசிரியர்கள் எவரையும் உட்செல்ல விடாது தடைசெய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேவேளை, அதிபருக்கு ஆதரவாக இருக்கும் சிலரால் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரும் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த பாடங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் இல்லாது இருந்து வருகிறதுடன் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இது தொடர்பாக அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிமனையின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை ஒரு தீர்வும் இல்லை என்றும் மாணவர் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வலய கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே, எங்களுக்கு உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்து குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்களை வலயக்கல்வி பணிப்பாளர் நியமித்து தரும் வரைக்கும் பாடசாலை கதவை திறக்க முடியாது என மாணவர்கள் சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 7.00 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த போராட்ட இடத்திற்கு தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்திருக்கின்றார். இதன்போது அங்கு சிற்றுண்டிச்சாலை நடத்தி வருவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு சமைத்து உணவு வழங்கி வரும் பெண் ஒருவரின் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதிபரின் பணக் கையாளுகை பற்றி அப்பெண்ணால் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதிபர் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அங்கிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை இன்று தொடக்கம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தற்காலிகமாக அங்கு இணைப்பதாகவும் உத்தரவாதம் அளித்ததையடுத்து பகல் 12.மணிக்கு மாணவர்கள் நுழைவாயில் கதவை திறந்து உட்செல்ல அனுமதித்தனர்.
யாழ் – உடுவில் மகளீர் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி அந்த கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர்.
இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை குறித்த மாணவியின் தற்கொலை முயற்சி தொடர்பில் உண்மையைக் கண்டறியும் வகையில் பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.
56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சந்தேக நபரை சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இனங் காணப்பட்டார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு வழங்கப்படுள்ளது.
தலைமன்னார் பகுதியில் பொலிஸாரின் ரீ சேர்ட் ஒன்றுடன் KPI என பெயர் எழுதப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவற்றை மீட்டிருந்தனர்.
அதன் போது பொலிஸ் ரீ சேர்ட் ஒன்றுடன் , ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் 67 ஐ மீட்டிருந்தனர். அவற்றில் 37 துப்பாக்கி ரவைகளில் KPI என எழுதப்பட்டுள்ளது.
KPI என்பது பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான கஞ்சி பானி இம்ரான் என்பதனை குறிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.