வவுனியா – ஓமந்தை, கொந்தக்காரன் குளம் பகுதியில் தமிழ் மக்களின் காணிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வனவளத் திணைக்களத்தின் காணி என்று அச்சுறுத்த முற்பட்ட போது மக்கள் முரண்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து RFO தர அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தும் காட்சிகள் தற்போது வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியை காட்டி மிரட்ட முற்பட்ட குறித்த RFO தர அதிகாரி இன்று சில இளைஞர்களுடன் முரண்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆயுதங்களை பகிரங்கமாக மக்களுக்கு எதிராகப் பயன்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக அனுர அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? என்பதே எமக்கு முன்னுள்ள வினா.
பத்து வருடங்களாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் கணிசமான எண்ணிக்கையிலான மாகாண சபைகள் ஏற்கனவே செயலிழந்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்களும் தெரிவித்துள்ளன.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.
அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணப் பையுடன் நின்றிருப்பதாக அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் அவர் இலங்கை திருகோணமலை மாவட்டம், ஆண்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அங்கிருந்து கள்ளத்தனமாக படகில் தப்பிவந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் அப்பெண்ணை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதில், தலைமன்னாரில் இருந்து நள்ளிரவு சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு அதிகாலையில் அரிச்சல்முனை வந்திறங்கியமை தெரிய வந்தது. படகுக்கு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
இவரது குடும்பத்தினர் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பிவந்து தமிழ் நாட்டின் பல்வேறு முகாம்களில் தற்போது தங்கியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றிய தரவுகளின்படி, இலங்கையின் பெயரில் எந்தவொரு செயற்கைக் கோளும் இல்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிறுவனம் ஒன்று உள்ளது. அதுதான் சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union) அல்லது ITU. இந்த ITU மூலம்தான் இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.
“செயற்கைக்கோளை தாக்கல் செய்யும் செயல்முறை மூன்று முக்கிய படிகளைக் கொண்டுள்ளது என்று ITU கூறியுள்ளது.
இதில் முதலாவது படிமுறை என்னவெனில், திட்டமிடப்பட்ட செயற்கைக்கோள் வலையமைப்பின் தொழில்நுட்ப விபரங்களை தொடர்புடைய நிர்வாக அமைப்பால் ITUஇற்கு சமர்ப்பிப்பதாகும்.
இரண்டாவதாக, தகவல் தொடர்பு இடையூறுகளைத் தவிர்க்க, வழங்கப்படும் இந்தத் தகவல்கள் மற்ற உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, பதிவு மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கான இறுதி அளவுருக்கள் குறித்த அறிவிப்பு. இந்த செயல்முறையே, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால், உலகளவில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, செயற்கைக்கோளை ஏவுவதற்கான நிலையான முறையாகும்.
இதற்கு வழக்கமாக குறைந்தபட்சம் மூன்று வருடங்களும் அதிகபட்சம் ஏழு வருடங்களும் ஆகும். அதுதான் செயல்முறை. ITU எனப்படும் இந்த அமைப்பின் இலங்கை சார்பில் இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுப்புரிமையை கொண்டுள்ளது.
அதன்படி, இந்த புவிசார் சுற்றுப் பாதைகளில் இலங்கை 121.5 மற்றும் 50 என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இதில் உள்ள தகவல்களின்படி, இந்த இடங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, நேபாளம், தஜிகிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் விரும்பினால் இந்த இடங்களில் தங்கள் பணியைத் தடையின்றித் தொடரலாம்.
ITU ஊடாக கிடைக்கும் தகவல்களின்படி, 121.5 மற்றும் 50 என இந்த புவிசார் சுற்றுப்பாதைகளில் தற்போது இலங்கை என்ற பெயரில் எந்த செயற்கைக் கோளும் இல்லை.
பின்னர், இந்த ITU ஊடாக சுப்ரீம் சாட் வன் என்ற செயற்கைக்கோள் இயக்கப்படுகிறதா என ஆராய்ந்தோம். அப்படி எதுவும் இல்லை. சுப்ரீம் சாட் வன் பின்னர் சைனாஸ் எட் டுவெல் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் தொடர்புடைய இந்த இடத்தில் சுற்றுப்பாதையில் உள்ள சீன செயற்கைக்கோள் பற்றி ITU வலைத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை.
இலங்கைக்குச் சொந்தமான இந்த சுப்ரீம் சாட் வன் அல்லது சீனா சாட் டுவெல் என்ற பெயரில் இலங்கைக்கு சொந்தமான சுற்றுப் பாதைகளிலிருந்து எந்தவொரு தகவலும் இல்லையென ITU தெரிவிக்கிறது.” எனத் தெரிவித்தார்.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டின் மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருதாவது,
வவுனியா, உக்குளாங்குளம், சிவன்கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் நுழைவாயில் மற்றும் வீட்டு வேலி மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
தாக்குதல் சத்தத்தையடுத்து வெளியில் வந்த வீட்டு உரிமையாளர் மீதும் அக் குழு தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை கடற்கரை பகுதியில் நிலத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற மன்னாரில் இருந்து வருகை தந்த சிறப்பு பொலிஸ் குழுவினர் நிலத்தின் கீழ் புதைத்து வைத்திருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.
குறித்த கஞ்சா போதைப்பொருளை இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வந்து , அவற்றை கடற்கரையை அண்டிய பகுதியில் நிலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா போதைப் பொருளுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து முன்னிலைப்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கிரிந்த மீன்பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைகளை சட்டவிரோதமாக கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் 262 லட்சம் ரூபா இழப்பை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு ஆணைக்குழுவினால் பல்வேறு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து ராஜித சேனாரத்ன வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தரவில்லை.
இந்நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதுடன் அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன் மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.
ரேணுகா ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் மனைவி ஆவார்.
அவரது இராஜினாமா கடிதம் அரசியலமைப்பு சபைக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சமன் ஏகநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் திருமதி ரேணுகா ஏக்கநாயக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பதவியும் வெற்றிடமாகியுள்ளது.
அதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போது இரு உயர் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.