Sunday, June 8, 2025
Huis Blog

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை சட்டரீதியாக அழைத்துவர ஏற்பாடு – மீன்பிடி அமைச்சர்

0

இந்தியாவில் நீண்ட காலமாக தங்கியுள்ள இலங்கை அகதிகளை சட்டரீதியாக அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

அண்மையில் இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணம் வருகை தந்த அகதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது கட்சி கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகளுக்கு பிரஜா உரிமை வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசினோம்.

இந்தியாவில் தங்கி உள்ள அகதிகள் இலங்கை வருவதற்கு சட்டரீதியான ஆவணம் ஒரு பிரச்சனையாக உள்ள நிலையில் சிலர் கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டுக்கு மீள வருகிறார்கள்.

அரசாங்கம் என்ற வகையில் எமது நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்களை சட்டரீதியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சினூடாக எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஆகவே இந்தியாவிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கை திரும்ப வேண்டாம் என கேட்டுக் கொள்வதோடு விரைவில் அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதிரடிக் கைதுகளால் கோவில், விகாரைகளுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்..!

0

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சமீபத்திய நாட்களில் விகாரைகள் மற்றும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம கோயிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு உயர் அரசு அதிகாரி, சிறப்பு பாதுகாப்புடன் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதி தேரரை சந்தித்து, அப்பகுதியின் முன்னணி துறவிகளைச் சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல், இந்தியாவுக்குச் சென்ற முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஒரு கோவிலில் பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.

பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசு அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கை; போக்குவரத்து சங்கங்கள் எச்சரிக்கை..!

0

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,

இதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்த சட்டமூலம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு, தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உட்பட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரணிலின் தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவர அரசு முயற்சி..!

0

ரணிலும், மனுஷ நாணயக்காரவும் அறிமுகப்படுத்தவிருந்த தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

8 மணிநேர வேலை மணித்தியாலத்தை ரத்து செய்வதற்காக ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த சட்டமூலத்தை, மீண்டும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான மாற்றம் ஏற்படுமாயின், ஒருபோதும் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது.

தற்போது, ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுமிடத்துக்கு, அதற்கு எதிராக உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பதற்குத் தொழிற்சங்கங்களுக்கு இயலுமை உண்டு.

எனினும், குறித்த சட்டமூலத்தில் பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்வதாயின், 30 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன.

இதனூடாக தொழிலாளர்களின் உரிமைகள் வெளிப்படையாக மீறப்படுவதுடன், இது முற்று முழுதாக தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சட்டமாகும்.

தொழிலாளர் சட்டத்தின் அரசியல் நோக்கம் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது. அதற்கு அப்பால், இந்தத் திருத்தம் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடுகளுடன் தொடர்புடையது.

இதனை அரசாங்கம் கொண்டு வரமுயற்சிக்குமாயின், ஒவ்வொரு நிறுவனமாகச் சென்று இது குறித்து பிரசாரம் செய்வதற்கும் தங்களது தரப்பு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கைது..!

0

மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா நிதி மோசடி குற்றப் பிரிவுப் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (07.06.2025) இடம்பெற்றுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாக கூறி ஈபிடிபியின்முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனுடன் இணைந்து செயற்பட்ட ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தினைப் பெற்றுள்ளார்.

அதற்கு பொறுப்பாக தனது காசோலையை அவர் வழங்கியுள்ளார். மதுபானசாலை அனுமதிப்பத்திரம் கிடைக்காத நிலையில், குறித்த காசோலையை வங்கியில் வைப்பிட்ட போது அதில் பணம் இல்லை எனத் தெரிவித்து வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா பொலிசாரின் நிதி மோசடி குற்றப் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டவர் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை நீதிமன்ற உத்தரவுக்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை வவுனியா ஈச்சங்குளம் உட்பட பல பகுதிகளில் மதுபானசாலை அனுமதிப் பத்திரம், எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப் பத்திரம் என முன்னாள் அபிவிருத்தி குழுத் தலைவரின் பிரதேச கட்சி செயற்பாட்டாளர்களால் பல மில்லியன் பணம் பெறப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

0

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் ஒருவர் கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் யாழ் – புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவனை தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் தண்டித்துள்ளார்.

அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் வீடு சென்ற மாணவன் மன உளைச்சல் அல்லது ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் மருந்து அருந்தியதாக கருத முடிகின்றது.

சட்ட ரீதியாக மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது தவறு எனக் காணப்படுகின்ற சூழலில் ஆளுமை மிக்க சமூகத்தை உருவாக்கும் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலகி பரீட்சை மைய பாடப் புத்தகத்தை மட்டும் கற்பிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு வரும் சூழலில் வடக்கின் கல்வியும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

தமிழரசுக் கட்சியை திசைகாட்டி ஆதரிக்காது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்..!

0

வட- கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கத் தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்று சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை அடியோடு நிராகரிக்கின்றோம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுக்கோ தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது.

மக்கள் வழங்கிய ஆணையை மீறிச் செயற்படும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை.

வடக்கு, கிழக்கில் எந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களுடன் இருக்கின்றதோ அந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க முடியும்.

மற்றைய சபைகளில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களுடன் இருக்கின்றதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க முடியும். இதில் தேசிய மக்கள் சக்தி தலையிடாது.

இதைக் குழப்பும் வகையில் – மக்களின் ஆணையை உதாசீனம் செய்யும் வகையில் எந்தக் கட்சியும் செயற்படக் கூடாது.” என தெரிவித்துள்ளார்.

யாழில் பேருந்தில் சிறுமிகளிடம் அத்துமீறிய இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

யாழ் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளை பாலியல் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்த முயற்சித்த இரு சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த இருவரும் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் தெரிய வருகையில்,

தனங்களப்பு பகுதியில் குறித்த இருவரும் மிகக் கொடூரமான செயற்பாடுகளைச் தொடர்ச்சியாகச் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்க்கை நடாத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த இருவரும் அண்மையில் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று (07) முதல் 12 ஆம் திகதி வரை அநுராதபுரம் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மூடப்படும்.

குறித்த அறிவிப்பை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அநுராதபுரம் நகரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளது.

இந்த நிலையில், பொசன் வாரம் இன்று தொடங்கி 13 ஆம் திகதி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

0

அரியாலை – செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்த அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்தப் புதைகுழியில் இருந்து புதைகுழியை தொடர்ச்சியாக அகழ வேண்டும் என்று அவர்களின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியும் அகழ்வை முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் திருப்திப்படும் வரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின் அடிப்படையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு நீதி அமைச்சின் ஊடாக நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அத்துடன், தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராய அறிக்கை மற்றும் அகழ்வில் திருப்தியடைவதாக தெரிவித்த நீதிவான், அவரே தொடர்ந்தும் அகழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதியும் வழங்கினார்.

அதேசமயம் இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வருகிறன.

மேலும், இதுவரை 17- 18 மண்டையோட்டு தொகுதிகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் 5 முழுமையாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!