Sunday, June 8, 2025
Huis Blog Bladsy 49

NPP நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பில் ஒருவர் கைது..!

0

குருநாகல் – பிங்கிரிய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயசிரி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான ​போக்குவரத்து வசதிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தாம் அங்கு சென்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசிரி பஸ்நாயக்க பின்னர் தெரிவித்திருந்தார்.

எனினும், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை தற்போதைக்கு வழங்கும் ஒப்பந்ததாரரை இரத்துச் செய்து விட்டு தமக்கு நெருக்கமானவர்களுக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குமாறு அவர்கள் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு அழுத்தம் பிரயோகித்ததாக தெரிவித்து பிரதேசவாசிகள் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரதேசவாசிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை முற்றுகையிட்டு எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த நிலையில், பொலிஸார் தலையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பாக வெளியில் அனுப்பும் நிலையேற்பட்டிருந்தது.

இதன் போது, இருதரப்பிலும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தனது அலுவல்களுக்கு இடையூறு மேற்கொண்டதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் இன்னும் எட்டுப் பேரைக் கைது செய்யவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் துயரம்; திடீரென மயங்கி வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

0

யாழில் திடீரென மயங்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

குறித்த துயர சம்பவம் யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை தனியார் கல்வியில் நிலையத்துக்கு மகளை ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிள் எடுக்கச் சென்றவர் திடீரென ஓடி வந்து மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக யாழ். போதனா வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று செவ்வாய்க் கிழமை யாழ். போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

யாழில் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயர்தர மாணவி உயிரிழப்பு..!

0

க.பொ.த உயர்தர பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த சனிக் கிழமை (30.12.2024) இடம் பெற்றுள்ளது.

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற சிறிகேசவன் ஸ்ரெபிகா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த மாணவி 30ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றைய பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் – தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார்.

பின்னர் அவரது தந்தை அலுவலாக வெளியே சென்றவேளை குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அனுரவின் “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்..!

0

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01.01.2025) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம் பெறவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத் திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01.01.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெறவுள்ளது.

கொழும்பு பிரதான நீதவானாக தனுஜா லக்மாலி நியமனம்..!

0

கோட்டை நீதவானாகச் செயற்படுகின்ற தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு பிரதான நீதவானாக செயற்பட்ட திலின கமகே மொராட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கல்கிஸ்ஸை நீதவானாகச் செயற்படும் நிலுபுலி லங்கா கோட்டை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மொரட்டுவை மேலதிக நீதவான் சத்துரிக்கா சில்வா கல்கிஸ்ஸை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திலின கமகேயின் சகோதரர் அண்மையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!