எனது பெயருக்கும், கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக் கூடிய வகையிலும், இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.அவரிடம் ஐந்து கோடி ரூபாய் (ஐம்பது மில்லியன்) நஷ்ட ஈடு கோரியுள்ளேன்.எனது அரசியல் நடவடிக்கையை ஆதாள பாதாளத்திற்குள் கொண்டு செல்லுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகின்ற வகையில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி இருக்கிறார்.அவரது கருத்துக்கள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் இதற்கு ஆதாரத்துடன் பதில் கூற வேண்டும்.இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை நாட உள்ளேன்.
மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று நடித்து பண மோசடியில் ஈடுபட்டவரை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணியைப் போன்று உள்நுழைந்து, வழக்காடி தருவதாகப் பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரை அடையாளம் காணும் அணிவகுப்பு இன்று நடத்தப்பட்ட பின்னர், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கைது செய்யப்பட்டவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போன்று செயற்பட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளதுடன், தற்போது கல்முனையில் வாழ்ந்து வருகின்றார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர், நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
திருமணமான பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாடளித்தவர், அனுமதியின்றி தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி Facebook பக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் பல பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி இதுபோல ஏராளமான Facebook பக்கங்களை உருவாக்கியது அம்பலமானது.
அத்துடன் ஒவ்வொரு பக்கத்திலும் 10,000 முதல் 20,000 பின் தொடர்பவர்கள் சேர்ந்தவுடன், குறித்த பக்கத்தை ரூ1,000 முதல் 2,000 வரையிலான விலையில் விற்பனை செய்திருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் பத்துக்கும் மேற்பட்ட Facebook பக்கங்கள் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேக நபருக்குப் பிணை அனுமதி வழங்கினார்.
எனினும், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் சந்தேகநபரின் செயற்பாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றும்,அவர் இதே போன்ற மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டால் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல விசாரணைகள் இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதமாகவும், வேண்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து விசாரணைகளையும் 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பான மாதாந்திரக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று (11.11.2025) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் கல்வித் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன. கல்வித் திணைக்களத்தின் கீழ் பல்வேறு நிதி மூலங்களிலிருந்து முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஒவ்வொரு வலய ரீதியாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.
சில ஒப்பந்தகாரர்கள் காட்டும் அலட்சியமான பணிச்செயல்முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஒப்பந்தகாரர்களின் பணிகளை மதிப்பீடு செய்து அவற்றை பகிரங்கப்படுத்தி, எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் முன்வைப்பது பற்றியும் ஆராயப்பட்டது.
திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் ஒப்பந்தகாரர்கள் சிட்டைகளை வழங்காமல் கொடுப்பனவுகளை தாமதப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
திணைக்கள ரீதியான மீளாய்வுக்குப் பின், வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்கள் ‘கஷ்டப் பிரதேசம்’ அல்லது ‘அதிகஷ்டப் பிரதேசம்’ வகைப்படுத்திலிருந்து நீக்கப்பட்டமை குறித்து கலந்துரையாடப்பட்டது. அவை மீளவும் நடைமுறைப் படுத்தப்படுவதற்கான நியாயப்பாடுகளுடன் கோரிக்கை முன்வைக்குமாறு ஆளுநர் பணிப்புரையிட்டார்.
மேலும், கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு இணங்க ஆபத்துக் கொடுப்பனவை வழங்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
பாடசாலைகளில் பல்வேறு காரணங்களின் பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். அத்தகைய அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், ஆசிரியர்கள் கற்றல் பணிகளை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு தங்களது கைப்பேசிகளில் காணொளிகள் பார்ப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனைத் தடுக்கும் பொருட்டு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தாங்களும், தங்கள் கீழ் பணிபுரியும் அதிகாரிகளும் திடீர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி, திட்டமிடல், பொறியியல்), கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்கள், மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி இணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நான்கு அமைச்சர்கள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் பிரித்தானியாவுக்கு பயணம் செய்த போது, அவர்களுக்கு சிக்கன வகுப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தும், அவர்கள் இரகசியமாக வணிக வகுப்பில் பயணித்ததாக குற்ற்ச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்றைய தினம்(10) வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தச் சம்பவம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தும் செயல் என்று குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சுஜீவ சேனசிங்கவின் கூற்றுப்படி, அவர்கள் முதலில் சிக்கன வகுப்புப் பிரிவில் அமர்ந்திருந்தனர்.
ஆனால், விமானத்தின் உட்புற விளக்குகள் அணைக்கப்பட்டவுடன், அவர்கள் “பேய்களைப் போல இரகசியமான முறையில்” வணிக வகுப்புக்குச் சென்று அங்குள்ள இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிறுவனத்தில், உரிய அனுமதிச் சீட்டு இன்றி இவ்வாறு அதிகச் செலவுள்ள வகுப்பில் பயணித்தது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் அடிப்படையில், யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் சிற்றூந்தில் பயணித்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து வாள், ஐயாயிரம் வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த சிற்றூந்து போலி இலக்க தகடு கொண்டது என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாகன உதவி புரிந்தார் என்ற அடிப்படையில் கைதான குறித்த நபருக்கு யாழ்ப்பாணத்தில் இயங்கும் குற்றக் குழுக்களுடன் தொடர்புள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் கொழும்பு விசேட காவல்துறை குழுவினரிடம் ஒப்படைக்கவுள்ளார்.
இதேவேளை கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் யாழில் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பிலிருந்து வந்த விசேட காவல்துறை குழுவால் மேலதிக விசாரணைக்காகக் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமான நிலையில், டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் இன்று வெற்றிகரமாக ஆரம்பமான நிலையில், இது தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று குறித்த நேரத்தில் பரீட்சை ஆரம்பமானதுடன் நாட்டிலுள்ள அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் எவ்விதத் தடங்கலும் இன்றிப் பரீட்சை வழமைபோல நடைபெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க தற்போது நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டது.
கடந்த இருபதாம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் பாரபட்சம் இருப்பதாக தெரிவித்து குறித்த இடமாற்றத்தினை நிறுத்தும் தடை உத்தரவை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது அன்றையதினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த முறைப்பாட்டாளர் தொடர்பான விடையங்களுக்கு நேற்று 10 ஆம் திகதி சம்பந்தப்பட்ட அரச தரப்பினை பதில் வழங்குமாறு மன்று கட்டளையிட்டது.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கானது யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரச சட்டத்தரணி தயார் இல்லாத காரணத்தினால் வழக்கானது இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் வழக்கு தொடுனரான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வருகை தந்ததுடன் அவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றப் பட்டியலில் வெளிநாடு சென்ற ஆசிரியர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் கல்வி திணைக்களத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றமையினால் 2024.09.12 திகதி NP/41/20/01/01/06/1-123 இலக்கமும் கொண்ட கடிதத்திற்கு அமைவாக 2024.03.01 முதல் அவரது பதவி வறிதாக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் அண்மையில் வெளியாகிய வடமாகாண ஆசிரிய இடமாற்றப்பட்டியலில் குறித்த ஆசிரியர் மடு வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், கிளிநொச்சி வலயத்தில் அதிபர் சேவையில் உள்ள ஒருவருக்கு 2026 ஆம் ஆண்டு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கல்வியில் முறைகேடான இடமாற்றங்கள் இடம் பெறுவதாக தெரிவித்து யாழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவது கல்வி அமைச்சின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறியுள்ளார்.
ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் சில இணைய தளங்களில் வெளிவந்த குரல் பதிவு தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் கட்சியின் தலைமைக் குழு வவுனியாவில் நேற்று (09.11) காலை முதல் மாலை வரை கூடி ஆராய்ந்து இருந்தது.
இதன்பின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பை கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி நடத்தியிருந்தார்.
ஊடக சந்திப்புக்கு முன்னதாகவே அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைகலநாதனையும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறும் பலமுறை கேட்டனர்.
ஆயினும், அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வம் அடைகலநாதன் எம்.பி ஊடக சந்திப்பைத் தவிர்த்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தார்.
இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சிக்கு எதிராக வேண்டுமென்றே சேறுபூசும் நோக்கில் திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன என ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.