அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, குறித்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (28) நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
யாழ். வடராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எவ்வித உத்தியோக பூர்வ அறிவிப்புக்களும் இன்றி திடீரென இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
25 வருடங்களுக்கு மேலாக முகாம் அமைத்து இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து நேற்று இராணுவம் வெளியேறியதை தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
மேலும், பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளது.
கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவமானது நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இயன்முகிலன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு பலமணி நேரம் ஆகியும் இளைஞனை காணவில்லை என தாய் மற்றும் தந்தை இணைந்து தேடியுள்ளனர்.
எனினும் தமது மகன் நண்பர்களுடன் எங்காவது சென்றிருப்பான் என்ற எண்ணத்தில் அவர்கள் உறக்கத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இன்று காலை குறித்த இளைஞனின் தந்தை மாடு கட்டுவதற்காக சென்ற நிலையில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் உயிரிழந்திருப்பதை அவதானித்ததாக தெரிய வருகின்றது.
இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இச் சம்பவம் குறித்து ஜெயபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் – சாவகச்சேரி பகுதியில் இன்றைய தினம் (27) கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
கணவன் மனைவியிடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் வழக்குக்காக குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்களை வீதியில் இழுத்து விழுத்திய கணவன், மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டார்.
இதன் போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந் நிலையில் சந்தேக நபரான கணவனை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணை அவரது சகோதரனே தன்னிடமிருந்து பிரித்ததாக கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வட மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் டக்ளஸ் டி போல் மற்றும் நகரசபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னரே நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.
பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தையைப் பழைய இடத்திற்கு மாற்றுவதற்குச் சபை மேற்கொண்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று கடந்த 2026 மார்ச் 12 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் மேல் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்தார்.
நகரசபையின் சனநாயக ரீதியான தீர்மானங்கள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்றும், இது நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும் அவர் வாதிட்டார்.
மேலும், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி என்பவர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே அதனைச் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்திருந்தமையைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, இந்த விசாரணை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தவிசாளரைப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியாகும் என்றும் வாதிட்டார்.
குறிப்பாக, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை இலக்கு வைத்து இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
சட்டத்தரணியின் வாதங்களை ஏற்றுக் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா,மனுதாரர்களின் வாதங்களில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடாதென இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான பெனார்சி பிரதீபன் மற்றும் சி. அபினாஸ் ஆகியோரின் அனுசரணையுடன் கு. குருபரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் – இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதான அவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
இதன் போது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை வழிநடத்திய பிரதான சந்தேக நபரான தேரரை , எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (27) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த தேரர் என்ற இந்தச் சந்தேக நபர், தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்பதற்காகக் காத்திருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் 22 தேரர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற இந்த பிரதான சந்தேக நபர் மிரிஸ்வத்தை பகுதியில் தலைமறைவாகியிருந்தார். அங்கு வைத்து நேற்று (26) அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அமிதானந்த என்ற இந்த தேரரின் மருத்துவ அறிக்கையின்படி, அவர் கைது செய்யப்படும் வேளையில் போதைப் பொருள் உட்கொண்டிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் காரைநகர் பகுதி வீதியால் தலைக் கவசம் இன்றி சென்றுள்ளார். இதன்போது அவரை வழிமறித்த ஊர்காவற்துறை பொலிஸார் அவர் மதுபோதையில் இருப்பதாக சந்தேகித்தனர்.
அதன் பின்னர் அவரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் மதுபானம் பாவித்தமை உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.
அதன் பின்னர் அவரது வழக்கு கடந்த 20ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், சாரதி அனுமதிப் பத்திரமானது மூன்று மாதங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னர் அதே நபர் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் முக்கிய பதவிக்கும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மதுபானம் பாவித்துவிட்டு வீதியில் விழுந்து கிடந்த இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த, பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமியை பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
ரிக்ரொக் மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவருடன், 15 வயதான சிறுமி ஓட்டம் பிடித்துள்ளார்.
நெல்லியடி பொலிசாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிசார் கைது செய்தனர்.
சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் அவருடன் முறையற்ற விதமாக நடக்கவில்லையென காதலன் தெரிவித்துள்ளார்.
எனினும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கிய போது, அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, தனது பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான முன்னாள் காதலனால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான முன்னாள், இன்னாள் காதலர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதே ஹேக்கர்களே இந்த ஆவணங்கள் காணாமல் போனதற்கும் காரணமாக இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
காணாமல் போயுள்ள கோப்புகள் பிரான்ஸ் நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை தொடர்பானவை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மற்றுமொரு பாரிய நிதி மோசடியை முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆவணங்கள் திருடப்பட்டிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட சைபர் தடயவியல் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.
இதன் ஒரு கட்டமாக, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கொடுப்பனவு மோசடியும் இதே திணைக்களத்தின் ஊடாகவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.