மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (24.10.2025) இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் வெள்ளிக் கிழமை மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்தினர்.
குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை தொடங்க அவுஸ்திரேலிய முதலீட்டாளர் நிதி வழங்கியிருந்தார்.
இந்த முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தொன்னந்தோட்டம், ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கும்.
இதன்போது, சுமார் 180 மில்லியன் பெறுமதியான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சி.ஐ.டி.யினர் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
எனினும், முக்கிய சந்தேக நபரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாக உள்ளனர். குறித்த இருவரையும் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (24) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தினர்.
இதன் போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு வடக்கு மாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடம்மாற்றத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாவட்டத்தில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும் அதிபர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான நியாயப்பாடுகளை தங்களின் மேலான கவனத்திற்கு முன் வைக்கின்றோம்” எனக் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் நடந்த மொத்த திருமணங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பத்தாயிரத்து இருநூற்று தொண்ணூறு (139,290) ஆக பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு (151,356) திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஒரு லட்சத்து எழுபத்தொராயிரத்து நூற்று நாற்பது (171,140) திருமணங்கள் நடந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து அறுநூற்று இருபத்தெட்டு (162,628) திருமணப் பதிவுகள் இடம் பெற்றுள்ளன, மேலும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் திருமணங்களில் படிப்படியாகக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்த திருமணங்களில் பெரும்பாலானவை பொதுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொருளாதாரப் பிரச்சினைகள், அதிகரித்த குடும்பப் பொறுப்புகள், உயர்கல்வி, வேலையின்மை, இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குவது, குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலையில் இருந்து போதுமான சம்பளம் இல்லாமை மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஆகியவை திருமணத்தைத் தாமதப்படுத்துவதற்கான காரணங்களாக சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றுபதிலை வழங்கியிருந்தார்.
பிரதமர் தெரிவித்ததாவது,
உள்நாட்டு பொறிமுறை மாத்திரமே அனுமதிக்கப்படும் சர்வதேச பொறிமுறைக்கு அனுமதியில்லை இதனால் நாடு பிளவுபடும் எனக் கூறி இருந்தார்.
இது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய சாணக்கியன்,
பிரதமர் அளித்த பதிலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், பிரதமரே, உங்களின் ஆட்சிக் காலத்தின் சுமார் 20% ஏற்கனவே முடிந்து விட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அதாவது, ஒரு வருடம் கடந்து விட்டது. இப்போது, ஒரு வருடம் கடந்த நிலையில், நீங்கள் இந்த சபைக்கு கூறுவது என்னவெனில் அரசு உள்நாட்டு முறைமையைக் கொண்டு செல்ல விரும்புகிறது, சர்வதேச தலையீடுகளுக்கு அனுமதியில்லை என்கிறீர்கள், ஏனெனில் அது சமூகங்களைப் பிளக்கும் என்றும் நாட்டில் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் கூறுகிறீர்கள்.
அந்த கருத்துடன் நான் ஒப்புக் கொள்வதில்லை. உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் நம்பும், நம்பிக்கையுடன் ஈடுபடும் ஒரு செயல்முறை இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை நிராகரித்துள்ளீர்கள், மறுத்துள்ளீர்கள்.
இதன் பொருள், பாதிக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக, எனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறேன். இந்த அரசு குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலைக் கேட்டு சர்வதேச விசாரணைக்கு ஒப்புக் கொள்வார்கள் என நாங்கள் நம்பியிருந்தோம்.
எனினும், எனது நிலைப்பாடு தெளிவாகவே இருக்கிறது, நாங்கள் உங்கள் உள்நாட்டு முறைமையை நிராகரிக்கிறோம், மேலும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக நாங்கள் சர்வதேச விசாரணையையே கோருகிறோம், ஏனெனில் இலங்கையின் அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை. இது போர் முடிந்த 16 ஆண்டுகளாக எங்களின் நிலைப்பாடாகவே உள்ளது.
இப்போது, நீங்கள் குறிப்பிட்ட உள்நாட்டு முறைமைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன், பிரதமரே, உள்நாட்டு முறைமை நீதியாக சமமாக செயல்படும் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள், எப்போது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (Office of Missing Persons) இயங்குவதற்குத் தேவையான பணியாளர் எண்ணிக்கை 250-ஐ கடந்து இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குப் பிறகும், தற்போது 29 பேரே உள்ளனர்? இதுதான் உள்நாட்டு பொறிமுறையா?
நீதி அமைச்சரே, தயவுசெய்து நான் இவ் எண்ணிக்கையை பிழையாக கூறுகிறேன் என்று சொல்ல வேண்டாம், நீங்கள் உங்கள் அமைச்சகத்தில் சிறிது நேரம் செலவழித்து இந்த எண்ணிக்கைகள் மற்றும் தரவுகளைப் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது, காணாமல் போனவர்களின் அலுவலகத்தில் 59 இடங்களில் 13 பேர் மட்டுமே உள்ளனர். ஒதுக்கப்பட்ட 129 மில்லியனில், ஜூன் 30 ஆம் திகதியளவில் 36 மில்லியன் ரூபாயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரே, எமக்கான நீதி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு விடயம். நீங்கள் கூறும் இந்த உள்நாட்டு முயற்சிகள் எந்தளவு பயனளிக்கும்?
இலங்கை இழப்பீடு அலுவலகம் (Office of Reparations) பற்றியும் கவலை இருக்கிறது. 2009 இல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாக ரூ.200,000 வழங்க ஒப்பந்தம் இருந்தது. ஆனால் 253 குடும்பங்களுக்கு மட்டுமே சுமார் ரூ.60 மில்லியன் வழங்கப்பட்டது.
2022 இல் அமைச்சர் அலி சப்ரி ரூ.100,000 வழங்க முன்வந்தார், அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ரூ.200,000 ஆக உயர்த்தினார்கள், அதுவும் நிராகரிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டதில் ரூ.800 மில்லியன் மட்டுமே செலவழிக்கப்பட்டது.
2025 பட்ஜெட்டில் மீண்டும் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை ஒரு காசும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பெரும்பாலும் 2,000 இற்கும் முன்னரே காணாமல் போனவர்களின் தாய்மார்கள். மொத்தம் 16,000 பேரில் சுமார் 7,000–8,000 பேர் அதற்கு முன்னரே பதிவு செய்யப்பட்டவர்கள்.
இப்போது, இலங்கை இழப்பீடு அலுவலகத்தில் நியமிக்கப்படவிருக்கும் இரண்டு உறுப்பினர்களும் இராணுவ பின்னணியுடையவர்கள் இதனால் பாதிக்கப்பட்ட எமது மக்களை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஐந்து உறுப்பினர்களில் மூவர் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். இந்நிலையில், நஷ்டஈடு அலுவலகம் எவ்வாறு நம்பகமாக செயல்படும் என்று நீங்கள் எப்படி கூற முடியும்?
மேலும், அன்றாட பிரச்சினைகள், உதாரணத்திற்கு மட்டக்களப்பு மருத்துவக் கல்லூரி பதாதை சிங்களத்தில் மட்டுமே உள்ளது, தமிழில் இல்லை. இவற்றையும் நான் எழுத்து மூலமாக தெரிவிப்பேன். எனது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதே ஆகும் என தெரிவித்தார்
கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொதுமக்களின் 38ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி வெளி வாசலில் இடம்பெற்றது.
இதனை கொக்குவில் படுகொலை நினைவேந்தர் குழு ஏற்பாடு செய்திருந்தது.
பொதுசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் மற்றும் 22, 23, 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை, கொக்குவில் பிரம்படி கோண்டாவில், கொக்குவில் இந்து கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் இந்திய இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடன்படவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைத் தேசிய நெறிமுறைகளினூடாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் எனவும், அந்த செயன்முறையானது, உள்ளக செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விசாரணைகளை அரசாங்கம் எதிர்ப்பதாகவும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்தவகையில் நம்பகமான உள்நாட்டு பொறிமுறையினூடாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது.
இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்கள், நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
கல்வியாளர்களுடன் முறையான ஆலோசனை இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீடிக்கப்பட்ட நேரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறும் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – நுகேகொட, பாகொடை வீதியில் உள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு துளைக்காத (Bulletproof) பென்ஸ் ரக கார் ஒன்றை மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் மீட்டனர்.
சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் குறித்த பழுதுபார்க்கும் நிலையத்தில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, பழுது பார்ப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட, இலக்கத் தகடுகள் இல்லாத இந்த காரை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இது குண்டு துளைக்காத வகையைச் சேர்ந்த வாகனம் என உறுதி செய்யப்பட்டது.
இந்த பென்ஸ் ரக கார் 2008 ஆம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேவைக்காக, குறித்த வாகனத்தை இறக்குமதி செய்த டிமோ நிறுவனத்துக்கு மீண்டும் கொண்டு வரப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுங்கம் மற்றும் டிமோ நிறுவனத்திடம் அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், இந்த வாகனம் 2008 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் (இந்தியத் தூதரகம்) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகத்திடமிருந்து அறிக்கை கோரப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை வாகனம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாகனம் ஒரு முக்கிய நபருக்காகப் பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறியும் நோக்கில் பல கோணங்களில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்கிசையில் வசிக்கும் (43) வயதுடைய குறித்த வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்தின் உரிமையாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று வியாழக் கிழமை(23) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி காலத்தில் ஏற்பட உள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து கலந்துரையாடும் அவசர முன்னாயத்த கலந்துரையாடலாக இடம்பெற்றது.
இதன்போது, மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது இயற்கை அனர்த்தங்களின் போது பாதிப்புக்கு உள்ளாகும் ஓர் பகுதியாக காணப்படும் நிலையில் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
மத்திய அரசுக்குச் சொந்தமான நீர்ப்பாசன திணைக்களம், பிரதான குளங்களில் நீர் அதிகமாக பெருக்கெடுக்கும் போது ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைப்பது தொடர்பாகவும், மாகாண சபைக்கு சொந்தமான நீர்ப்பாசன குளங்கள், ஆறுகளில் திடீரென ஏற்படுகின்ற வெள்ள நிலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பிலும்,
மன்னார் மாவட்டத்தில் 165 க்கும் மேற்பட்ட குளங்கள் கமநல அபிவிருத்தி திணைக்களங்களுக்குள் காணப்படுகின்றது. அந்த குளங்களில் ஏற்படுகின்ற வெள்ள நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் வெள்ள நிலைமையின் போது மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்குவதற்கு தற்காலிக பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. அவ்வாறான பாதுகாப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும்,கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிலைமை ஏற்படுகின்ற போது அதை கடலுக்கு வெளியேற்றுகின்ற சந்தர்ப்பங்களில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மன்னார் நகரில் வெள்ளை நீரை கடலுக்குள் செலுத்துவது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே. திலீபன், திணைக்கள தலைவர்கள், முப்படையினர், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.