Monday, May 11, 2026
Huis Blog Bladsy 19

தமது வேலைக்கு ஆபத்து; இழப்பீடு வழங்கும் பணிகளிலிருந்து GS விலகல்..!

0

‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் பணிகளிலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் நேற்று (ஜனவரி 19) முதல் விலகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவு நடவடிக்கைகளில் ஒரு முறைமையை ஏற்படுத்துதல், வழிகாட்டல்களைத் தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டின் கீழ் இழப்பீடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளை முறையாக மதிப்பீடு செய்யாமல் 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குவதற்கும், அநாவசியமாக குடியிருப்பவர்களுக்கும் அந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர், இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தினால் எதிர்காலத்தில் கிராம உத்தியோகத்தர்கள் பல கணக்காய்வுப் (Audit) பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வீட்டு இழப்பீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முற்படும் போது கிராம உத்தியோகத்தர்களுக்கு கிராம மட்டத்தில் பலத்த அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரால் மதிப்பீடு செய்யப்படாத வீடொன்றுக்கு இழப்பீடு வழங்கினால், அதற்கான பொறுப்புக்கூறல் கிராம உத்தியோகத்தர் மீதே சுமத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சுற்றறிக்கையில் பகுதியளவான சேதங்களுக்குரிய மதிப்பீடு அல்லது அளவுகோல்கள் முன்வைக்கப்படாததால், சுவரில் ஒரு விரிசல் ஏற்பட்டிருந்தாலும் அல்லது ஒரு தகரம் சேதமடைந்திருந்தாலும் 5 இலட்சம் ரூபாவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி நாளை போராட்டம்..!

0

சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் நாளை

(21) காலை 10 மணிக்கு அமைதிவழிப் போராட்டமொன்றை முன்னெடுக்கப் பல சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்காக, சட்டமா அதிபர் மேற்கொண்ட அத்துமீறிய தலையீடே இந்தப் போராட்டத்திற்கு உடனடி காரணமாக அமைந்துள்ளது.

பாரிந்த ரணசிங்க சட்டமா அதிபராகப் பதவியேற்றது முதல், அந்தப் பதவிக்குப் பொருத்தமற்ற 20-க்கும் மேற்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கின் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீளப் பெற்றமையும் இதில் உள்ளடங்கும்.

சட்டமா அதிபர் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக இந்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவரைப் பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்திப் பலமான எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளன.

11ஆம் வகுப்பு மாணவியாகிய காதலியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்..!

0

11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தேன – கோணவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

காதலனை சந்திக்கச் சென்ற சந்தர்ப்பங்களில் அவர் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு காதலனும் அவரது நண்பனும் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வருவதாகவும், கடந்த 17ஆம் திகதி காலை வீட்டைவிட்டு வெளியேறி இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவி பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மேலதிக வைத்திய பரிசோதனைக்காக மாணவி நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 16–17 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் 19ஆம் திகதி அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதை அடுத்து, 2026 பெப்ரவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு

யாழில் இருவருக்கு மரணதண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு..!

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் (20) வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளிக்காக கண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி அழிக்கப்படுகிறது..!

0

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக ஆளுங்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினருமான செ.திலகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட பிரஜாசக்தி வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (19) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் செல்லுமிடமெங்கும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக பெற்றோர்கள் தொடர்ச்சியாக முறையிடுகிறார்கள் , கடந்த வருடம் வன்னி மாவட்டத்திலிருந்து ஆசிரியர்கள் யாழ் மாவட்டத்திற்கு பதிலீட்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அங்கே பெரும் தவறு நடந்துள்ளது

வன்னி மாவட்டத்திலிருந்து ஆசிரியர்களை யாழ் மாவட்டத்திற்கு அனுப்பிய பின்னர் வன்னி மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்காமல் ஏமாற்று நாடகம் நடந்துள்ளது , இதனை சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் வன்னி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை வழங்கிய பின்னரே யாழ் மாவட்டத்திற்கு எடுத்திருக்கவேண்டும் எனவும், இது தவறான செயற்பாடு எனவும், தவறு செய்தவர்கள் குற்றவாளிகள் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து இவ்வாறான குற்றவாளிகள் வடக்கு மாகாணத்திலிருந்து எமது வன்னிப் பிரதேசத்தின் கல்வியையும் வடக்கு மாகாணத்தின் கல்வியையும் சீரழித்துக் கொண்டிருக்கும் செயற்ப்பாடு கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது செய்வதற்கு பிரஜாசக்தி வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்தி தலைவர்களை நியமிப்பதன் ஊடாகவும், பல்வேறு குழுக்களை அமைப்பதன் ஊடாகவும், பல புத்திஜீவிகளை கொண்ட அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் இவ்வாறான தவறுகளை எமது மண்ணில் இடம்பெறாது மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் ஆரம்ப பணியாகவே இன்று பிரஜாசக்தியினுடைய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் குறித்த நியனம் ஊடாக பாரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை செவ்வனே செய்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வீர்கள் எனவும் தெரிவித்தார்.

ஊழலற்ற அபிவிருத்தியே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – பிமல் ரத்நாயக்கா

0

திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

‘பாலதக்ஷ மாவத்தை’ மேம்பாலத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“திருடியும், வீண்விரயம் செய்தும் நாட்டை அழித்தமையாலும், நாட்டை வங்குரோத்து அடையச் செய்தமையாலும் ஏற்பட்ட பொருளாதாரக் குற்றங்களின் சாபத்திற்கு முழு நாடும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாங்கள் அந்த சவால்களை வெற்றி கொண்டு, திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.

கொழும்பு நகரின் மிகவும் பரபரப்பான வர்த்தக நிலையங்கள், ஜனாதிபதி செயலகம், பெருமளவான ஹோட்டல்கள் இப்பகுதியை அண்மித்து அமைந்துள்ளதால் இவ்விடம் குறிப்பிடத்தக்க வாகன நெரிசல் நிலவிய ஒரு இடமாகும்.

அந்த வாகன நெரிசலுக்குத் தீர்வாக மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க சில வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

அவற்றில் இரண்டு மேம்பாலங்களின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் 2022 ஆம் ஆண்டில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஒன்றாகும்.

ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் இப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் நீண்ட காலம் தாமதமானது.

பொலிஸ் மா அதிபருடன் நாங்கள் மேற்கொண்ட கள விஜயத்தின் பயனாக, பொலிஸ் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொண்டு நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்த முடிந்தது.

2,700 மில்லியன் ரூபாவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மேம்பாலத்திற்கு, நிர்மாணப் பணிகள் தாமதமானதால் மேலதிகமாக மேலும் ஒரு பில்லியன் ரூபாவை செலவிட நேரிட்டது. இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தமை மக்களுக்கு பெரும் வசதியாகவும் பயனாகவும் அமையும்.

இதன் நிர்மாணப் பணிகளைத் துரிதமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸ் திணைக்களத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உட்பட பத்து பேரின் விளக்கமறியல் நீடிப்பு..!

0

திருகோணமலை கடற்கரையில் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் இம்மாதம் 14ம் திகதி கைது செய்யப்பட்ட பௌத்தப்பிக்குகள் நான்குபேர் உட்பட பொதுமக்கள் 5 பேர் முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் ஒரு சந்தேக நபரும் முன்னிலையாகி இருந்த நிலையில் குறித்த 10பேருக்கும் விளகமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எஸ் எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிணை வழங்குவதற்கு குறித்த நீதிமன்றத்திற்கு அனுமதி இல்லை எனவும் சந்தேக நபர்களால் தொடரப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கானது மீளப் பெறப்பட வேண்டும் என பொலிசாரால் முன்வைக்கப்பட்ட நிலையில், திருகோணமலை கடற்கரையோரமாக 11மீற்றர் தூரத்தில் குறித்த கட்டுமானமானது அமைந்திருப்பதால் அது கரையோரப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றத்தில் கடற்கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் தரப்பினால் முன்வைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

வன்னி தமிழ் எம்பிகளை புறக்கணித்து வடமாகாண பொங்கல் விழா மன்னாரில்..!

0

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டு தோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் முன்றலில் இன்று ஞாயிற்றுக் கிழமை (18) காலை நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோர் அழைக்கப்பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் குறித்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளாது புறக்கணித்தனர்.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் வவுனியாவில் வேறொரு பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது நிகழ்வில் விருந்தினராக வடக்கு மாகாண கெளரவ. ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டார்.

இதேவேளை குறித்த நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ, வன்னி மாவட்ட இந்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ எதுவித அழைப்பும் வழங்கப்படாது திட்டமிட்ட புறக்கணிப்பு இடம் பெற்றுள்ளது.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் சில அதிரடி உண்மைகள் ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளியாகலாம். இதனால் வடக்கின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிக்கு பாரிய தலையிடியாக அது மாறலாம்.

ஜனாதிபதியின் போதை ஒழிப்பு கூட்டத்திற்கு 70 பேருந்துகள்; போக்குவரத்து பாதிப்பு..!

0

ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் வெள்ளிக் கிழமை (17) இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பேருந்துகளில் பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

யாழில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தேசிய வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக “முழு நாடுமே ஒன்றாக” என்கின்ற தேசிய செயற்பாட்டை ஆரம்பிக்கும் முகமாக ‘அகன்று செல்’ என்கின்ற தொனிப்பொருளில் யாழ் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்துக்கே இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.

இதன் காரணமாக யாழ். மாவட்டத்தில் உள்ளூர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்வோர் பாரிய அசோகரிங்களுக்கு உள்ளாகினர்.

யாழ். மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைகளில் பேருந்து பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பேருந்துகளை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியமை பொறுப்பற்ற செயல் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்துகளை விசேட கட்டணங்களின் அடிப்படையில் வழங்கியதாக தெரிவித்தார்.

அனைவருக்கும் சமமான, தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே எமது கொள்கை – பிரதமர்

0

எந்தவொரு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்த போதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பு குறித்துப் மாவட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் இடையே, சனிக்கிழமை (17) முற்பகல் புத்தளம் விஞ்ஞானக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

இலங்கையின் தற்போதைய நிலவரத்தின்படி, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், விஞ்ஞான மற்றும் கணித பாடத்துறைகளின் ஊடாகக் கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான தங்கு தடையற்ற, சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் கொள்கையுமாகும்.

விஞ்ஞானப் பாடத்துறைக்காக முன்னெடுக்கப்படும் இந்தப் பரீட்சார்த்த முயற்சிகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் விஞ்ஞானம் அல்லது கணிதம் என்பதற்காக நாம் மிகை மதிப்பீடுகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை. விஞ்ஞானம் மற்றும் கணிதத்தைப் போலவே ஏனைய அனைத்துத் துறைகளும் நமக்கு முக்கியமானவை.

ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ இருப்பினும், அவர் மக்களுடன் மக்களுக்காகவே பணியாற்றுகின்றார். அங்கே மனிதநேயம் போன்ற மானுடப் பண்புகளும் அவசியமாகின்றன.

எதிர்காலத்தில் எமது நாட்டை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையான மனிதநேயம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மானுட உறவுகளை மதிக்கும் பரிபூரணமான பிரஜைகளை, ஒரு தரமான கல்வியின் ஊடாக மட்டுமே உருவாக்க முடியும்.

பாடசாலைகளில் பெருமளவு ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதற்காகச் சுமார் 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் ஆசிரியர்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கற்றல் என்பது விடயங்களை மனப்பாடம் செய்வது மாத்திரமல்ல. தேடலின் ஊடாகத் தகவல்களைக் கண்டறியும் ஆர்வம் பிள்ளைகளிடம் உருவாக வேண்டும். எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!