Friday, March 6, 2026
Huis Blog Bladsy 20

துப்பாக்கி விவகாரம்; முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சி.ஐ.டியால் கைது..!

0

முன்னாள் அமைச்சர் உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் இடம்பெற்ற விசாரணையில் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டு டக்லஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, பின்னர் 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதுஷ்’ என்பவரின் விசாரணையைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதத்தின் தொடர் எண்ணைச் சரிபார்த்த போது, ​​சம்பந்தப்பட்ட துப்பாக்கி தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இந்நிலையில் விசாரணையின் போது, ​​அந்த சிரேஷ்ர அரசியல்வாதி அது எவ்வாறு காணாமல் போனது என்பதை வெளியிடத் தவறிவிட்டதாகவும், அதன்படி அவர் சிஐடியால் கைது செய்யப்பட்டார் என்றம் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுமந்திரனின் அதிரடி; தமிழரசுக் கட்சியின் முன்னாள் தவிசாளர் கட்சியிலிருந்து நீக்கம்..!

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முள்ளியவளை 8ம் வட்டார உறுப்பினருமான சின்னராசா லோகேஸ்வரன் கட்சியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடன் செயற்படும் வண்ணம் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உத்தரவை மீறி தேசிய மக்கள் சக்தியின் கரைத்துரைப் பற்று பிரதேச சபையின் பாதீட்டுக்கு வாக்களித்தமையால் கட்சியின் செயலாளரால் நீக்கப்பட்டுள்ளார்.

ஆழிப் பேரலையால் உயிரிழந்த மாணவர்களுக்கு முல்லைத் தீவில் அஞ்சலி..!

0

கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் போது ஆழிப் பேரலையினால் உயிரிழந்த 68 மாணவர்களுக்கு 26.12.2025இன்று கள்ளப்பாடு பாடசாலையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ம.சுரேஸ்தரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் உயிர்நீத்த மாணவர்களின் உறவினர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக கள்ளப்பாடு பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும், உறவினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் முதல் தொடர்வேலை நிறுத்தம்; பல்கலை ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை..!

0

அடுத்த வாரம் முதல் தொடர் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டு பல்கலைக் கழகங்களை முடக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்களின் பீடாதிபதிகள் மற்றும் துறைகளின் பிரதானிகளை நீக்கும் அதிகாரம் பல்கலைக்கழக செனட் சபைக்கு சட்டமொன்றின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை திருத்தம் செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமரின் வாக்குறுதியை மீறும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் எனவே குறித்த விடயத்தில் உடனடி தீர்வொன்றை வலியுறுத்துவதாகவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறின்றேல் அடுத்த வாரம் முதல் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களையும் முடக்கும் வகையில் தொடர் வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் சாருதத்த இளங்கசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP பிரதேச சபை உறுப்பினர் கைது..!

0

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (26) அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதேச சபையின் மங்களஎலிய தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி தான் அனர்த்த நிவாரணக் கடமை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், குறித்த உறுப்பினர் பயணித்த சிறிய லொறி வண்டி மோதி விபத்து இடம்பெற்றதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் உறுப்பினர் தன்னைத் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தான் முந்தலம பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற அனர்த்தக் குழுக் கூட்டத்தின் பின்னரும் குறித்த உறுப்பினர் தனக்குத் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தித் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், குறித்த உறுப்பினர் இன்று காலை முந்தலம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்ற கம்பஹா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கமறியலில்..!

0

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜா-எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டார்.

வேறு ஒருவரால் திருடப்பட்ட தங்க நகைகளை முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்துள்ளதாகவும், அந்த திருட்டுப் பொருட்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமலிருக்கவும் 300,000 ரூபா பணமும் முக்கால் பவுன் தங்கமும் இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.

இதில் 250,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற போதே சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்தது.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரரின் மகள் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும், மற்றைய பிள்ளை பெப்ரவரி மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த சந்தேகநபர் தொடர்பான பிணை கோரிக்கையை எதிர்வரும் தினத்தில் உரிய பிரதான நீதவான் நீதிமன்றில் முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு வருஷவிதான, சந்தேகநபரை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

வெடிகுண்டு மிரட்டலால் கண்டி மாவட்ட செயலகத்தில் பரபரப்பு..!

0

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சிறப்பு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப் பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் செய்தி மூலம் ஒரு அநாமதேய செய்தி வந்ததை தொடர்ந்து இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரான்சிலிருந்து குடும்பமாக வந்த 15 வயது சிறுமி கர்ப்பம்; பெற்றோர் அதிர்ச்சி..!

0

கடந்த வற்றாப்பளை திருவிழா காலத்தின் போது தமது சொந்த இடமான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வந்து குடும்பமாக தங்கியிருந்த பிரான்ஸ் புலம்பெயர் தம்பதிகளின் 15 வயது சிறுமி தற்போது பிரான்சில் 6 மாத கர்ப்பமாகவுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த ஒக்ரோபர் மாத தொடக்கப்பகுதியில் குறித்த சிறுமி பிரான்சில் பாடசாலையில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கர்ப்பமடைந்துள்ளது வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெற்றோர் மற்றும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரான்சிலிருந்து முல்லைத்தீவில் தங்கியிருந்த காலப் பகுதியில் தமது வீட்டு வந்து சென்ற புகைப்பபடம் எடுக்கும் ஒருவரே காரணம் என கூறியுள்ளார்.

குறித்த சிறுமியும் அவளது தாயார் மற்றும் முல்லைத்தீவில் வாழ்ந்து வந்த அவர்களது சில உறவுகளும் குறித்த சிறுமியின் பூப்புனித நீராட்டு விழாவின் தொடர்ச்சியான சில காட்சிகளை எடுப்பதற்காக இரணைமடு மற்றும் அப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் அழகிய இடங்களுக்கு புகைப்பட ஸ்ருடியோவின் வாகனத்திலேயே திரிந்துள்ளார்கள்.

அந் நேரத்திலேயே அந்த வாகனத்தில் வந்த ஸ்ருடியோவில் வேலை செய்யும் ஒருவனுடன் சிறுமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் சிறுமியும் அவளது தாயார் உட்பட ஒரு சிலரும் குறித்த ஸ்ருடியோவில் வேலை செய்யும் சம்மந்தப்பட்டவுடன் முல்லைத்தீவு நாயாறு கடற்கரை மற்றும் முல்லைத் தீவுக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிறு தீவு என்பவற்றுக்கு சென்று படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார்கள்.

அந் நேரத்தில் முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் அங்கு வைத்தே குறித்த சிறுமியுடன் புகைப்படப்பிடிப்பாளன் உறவு கொண்டதாகவும் சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தற்போது சிறுமியின் பெற்றோர் முல்லைத்தீவுக்கு வந்துள்ளதுடன் சிறுமியை கர்ப்பமாக்கிய புகைப்படப் பிடிப்பாளனை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

அவன் வேலை செய்த ஸ்ரூடியோவுக்கு அவன் தற்போது வருவதில்லை எனவும் குறித்த ஸ்ரூடியோவில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அவனைப் போன்றவர்களை தொலைபேசியில் அழைத்து தாம் படப்பிடிப்பை மேற்கொள்வதாகவும் ஸ்ரூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு அவனைக் கைது செய்யும் நடவடிக்கையில் பிரான்ஸ் தம்பதியினிர் ஈடுபட்டுள்ளார்கள்.

கர்ப்பமாக்கியவன் இளைஞனா அல்லது குடும்பஸ்தனா என்பது கூட சிறுமிக்கு தெரியாது என்றும் ஸ்ரூடியோவில் விசாரணை செய்த பின்னரே அவனது புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் என்பவற்றை பெற்றோர் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சிறுமியைக் கர்ப்பமாக்கிய நபர் 27 வயதான வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

சமூக விழிப்புணர்வுக்கான பதிவு

ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்த கள்ளப்பாடு..!

0

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த பொருந்திரளான மக்கள் உயிரிழந்தனர்.

இந் நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2025இன்று கள்ளப்படு உதயம் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் ஈகைச்சுடர் மற்றும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த உறவுகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப் பேரலையினால் காவு கொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர்.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி. இராஜஜோகினி ஜெயக்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கிராம உத்தியோகத்தர்கள், கள்ளப்பாடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், கள்ளப்பாடு கிராமமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லையில் காணியற்றோருக்கு விரைவில் காணிகள் வழங்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்பி கோரிக்கை

0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 24.11.2025 இடம் பெற்றது. குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389பேருக்கு காணிகள் இல்லை. எனவே காணி அற்றவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

குறிப்பாக புதுக்குடியிருப்பில் 1500 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. இந்நிலையில் கூடியவிரைவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

அதற்கமைய துணுக்காய் மாந்தை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகளின்றி இருப்பதாக பிரதேச செயலகத் தரவுகளின் மூலம் அறியக் கூடியதாக விருக்கின்றது.

எனவே காணிகளுக்காக விண்ணப்பித்துள்ள எமது மக்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு காணிகளற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்கத் தவறினால், காணிகளற்ற மக்களுடன் இணைந்து பிரதேச செயலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டிருக்கும்.

எனவே விரைவாக குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – என்றார்.

இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் இதன் போது பதிலளிக்கையில்,

காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய அவ்வாறு காணியற்றோருக்கு வழங்கப்படவேண்டிய காணிகள் இனங் காணப்பட்டுள்ளதுடன், அக்காணிகள் அளவீடு செய்யப்பட்டு வழங்குவதற்கு ஏற்ற வகையில் தயார் நிலையிலும் உள்ளன.

எனவே காணியற்றவர்களுடைய பட்டியலை ஆராய்ந்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் காணிக்கச்சேரி நடாத்தப்படும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!