அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (08) பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாரும் இது வரை ஏன் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தவில்லை என்பதை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் விளக்கி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பின்பு, சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக குறித்த வழக்கு நேற்று (08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னலையான சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் தந்தை என நிரூபிக்க , இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி செவ்வந்தி சேனாதிவீர எனும் பெண் விமானி ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெருசா தம்பையா, குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாமிக்க கருணாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, DNA பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நிரூபிக்க வேண்டிய சுமை முறைப்பாட்டாளரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சாமிக்க கருணாரத்ன DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரிப்பதாகவும், குழந்தையின் தந்தை உரிமையை மறுப்பதாகவும் சட்டத்தரணி அசேல ரேகவ நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன 100,000 ரூபா பெறுமததியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ் கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ், வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சந்தித்து , இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதும், எமது வலைகள் சேதமாக்கப்பட்டு , எமது வாழ்வாதாரத்தை அழிப்பதுடன் , பொருளாதார ரீதியாகவும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
எனவே இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி அவர்களுக்கு எதிராக போராடுவோம்.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழில், நீரியல் வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம்.
அங்கு மாவட்டச் செயலக வாயிலை மூடி எமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேகரிக்க வரும் நபர்கள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிலர் மோசடி செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இது போன்ற உதவிகளை சேகரிக்கும் மக்களின் உண்மை நிலையை ஆராய்வது மிகவும் முக்கியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதவி வழங்கும் போது அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் அல்லது கிராம சேவை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் நிவாரணம் வழங்கப்பட்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உட்லர் தெரிவித்துள்ளார்.
வெளியாட்கள் சம்பந்தப்பட்ட நன்கொடையாளர்களிடம் கேட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கையின் வட மாகாணத்தில், யாழ் குடாநாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பே ‘வன்னி’ என அழைக்கப்படுகிறது. காடுகளும், குளங்களும், வயல்வெளிகளும் நிறைந்த வன்னிப் பெருநிலம், வெறும் புவியியல் பிரதேசம் மட்டுமல்ல; அது தனக்கென ஒரு தனித்துவமான, வீரச் செறிந்த, அதே நேரம் துயரம் தோய்ந்த வரலாற்றைக் கொண்ட ஒரு சரித்திரப் பூமி.
தன்னாட்சி புரிந்த வன்னியர் தலைமைகளின் எழுச்சி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தீரமிக்க போராட்டங்கள், நவீன கால உள்நாட்டுப் போரின் மையமாகி சந்தித்த பேரழிவுகள் என வன்னியின் வரலாறு பல முக்கிய கட்டங்களைக் கொண்டது.
தொன்மையும் பெயர்க் காரணமும்’வன்னி’ என்ற பெயர் ‘வனம்’ (காடு) என்ற சொல்லிலிருந்து மருவியதாகக் கருதப்படுகிறது. இப்பிரதேசத்தின் அடர்ந்த காட்டு வளம் காரணமாக இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். மேலும், இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்கள் ‘வன்னியர்கள்’ என அழைக்கப்பட்டதாலும் இப்பெயர் நிலைபெற்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வன்னியில் மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. பெருங் கற்காலப் பண்பாட்டு மையங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.
அனுராதபுர மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களின் காலத்தில், வன்னிப் பிரதேசம் ஒரு பாதுகாப்பு அரணாகவும், விளைபொருள் வழங்கும் ஒரு பின்தளப் பிரதேசமாகவும் விளங்கியது. வன்னியர்களின் எழுச்சியும் பொற்காலமும் வன்னியின் வரலாற்றில் முக்கியமான அத்தியாயம், வன்னியர்களின் எழுச்சியாகும்.
சோழர்களின் ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்த பின்னர், மத்திய அரசின் பிடி தளர்ந்த போது, 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வன்னிப் பிரதேசம் முழுவதும் பல சிற்றரசுகள் தோன்றின. இவற்றை ஆண்ட தலைவர்களே வன்னியர்கள் எனப்பட்டனர்.
நிர்வாகம்
ஒவ்வொரு வன்னியரும் தத்தமது பிரிவுகளைத் தன்னாட்சியுடன் நிர்வகித்தனர். அவர்கள் தமக்கெனத் தனியான படையணிகளையும், நிர்வாகக் கட்டமைப்பையும் கொண்டிருந்தனர். வரி வசூலித்தல், நீதி வழங்குதல் போன்றவை அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
யாழ்ப்பாண இராச்சியத்துடனான உறவு
வன்னியர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாண இராச்சியத்திற்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர்களாகவே விளங்கினர். யாழ்ப்பாண மன்னர்களுக்குத் தேவைப்படும் போது தமது படைகளை அனுப்பியும் உதவினர்.
இருப்பினும், சில சமயங்களில் யாழ்ப்பாண அரசுக்கு எதிராகவும் இவர்கள் கிளர்ச்சி செய்ததற்கான சான்றுகளும் உள்ளன. இவர்களின் தன்னாட்சி மனப்பான்மையும், வீரமும் அவர்களை யாருக்கும் முழுமையாக அடி பணியாதவர்களாக வைத்திருந்தது. பனங்காமம், கரிக்கட்டுமூலை, முள்ளியவளை, தென்னமரவாடி போன்ற பல வன்னிமைகள் சிறப்புற்று விளங்கின.
அந்நியர் எதிர்ப்பும் பண்டார வன்னியனும்
ஐரோப்பியர்களின் வருகை, வன்னியர்களின் தன்னாட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகியோரால் வன்னியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியவில்லை. வன்னியின் அடர்ந்த காடுகளும், வன்னியர்களின் கெரில்லாப் போர் முறையும் அந்நியப் படைகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.
இந்த எதிர்ப்பு வரலாற்றின் உச்சபட்ச நாயகனாகத் திகழ்பவன் மாவீரன் பண்டார வன்னியன். கற்சிலைமடுவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பண்டார வன்னியன், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தான்.
1803 ஆம் ஆண்டு, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவுக் கோட்டையைத் தாக்கி அழித்து, அங்கிருந்த பீரங்கிகளைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தான். அவனது வீரம் வன்னி மக்களின் விடுதலை உணர்வின் அடையாளமாக இன்றும் போற்றப்படுகிறது.
இறுதியில், ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டாலும், பண்டார வன்னியனின் தியாகம் வன்னி வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்துவிட்டது. அவனது வீழ்ச்சியுடன், வன்னியர்களின் தன்னாட்சி யுகம் முடிவுக்கு வந்தது.
உள்நாட்டுப் போரும் வன்னியின் அழிவும்
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இலங்கை இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறிய போது, வன்னிப் பிரதேசம் அதன் மையக்களமாக மாறியது. அடர்ந்த காடுகள் நிறைந்த அதன் புவியியல் அமைப்பு, விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.பல தசாப்தங்களாக, வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் ஒரு நிழல் அரசாங்கத்தின் (de facto state) கீழ் இயங்கியது. கிளிநொச்சி அதன் நிர்வாகத் தலைநகராக விளங்கியது.
இக்காலத்தில், வன்னி எண்ணற்ற இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்தது. மக்கள் சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாகினர்.2008-2009 காலப்பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போர், வன்னியின் வரலாற்றில் ஒரு பெரும் ரத்தக்களரியைப் பதிவு செய்தது.
மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து, முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டனர். போர் முடிவுக்கு வந்த போது, வன்னிப் பிரதேசம் சொல்லொணா அழிவைச் சந்தித்திருந்தது. மனித உயிர்களும், சொத்துக்களும், உள்கட்டமைப்புகளும் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டன.
தற்கால நிலை
போருக்குப் பின்னரான காலத்தில், வன்னி மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறது. மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றம், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் எனப் பல சவால்களுக்கு மத்தியில் வன்னி மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், போரின் வடுக்களும், தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினைகளும், இராணுவ மயமாக்கலும் இப்பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கைக்குத் தொடர்ந்தும் சவாலாகவே உள்ளன.
வன்னியின் வரலாறு, தன்னாட்சியின் பெருமிதத்தையும், அந்நிய எதிர்ப்பு வீரத்தையும், போரின் கோரமான அழிவையும் ஒருங்கே கொண்டது. பண்டார வன்னியன் போன்ற மாவீரர்களைத் தந்த இந்த மண், நவீன வரலாற்றின் மிக மோசமான மனித அவலங்களில் ஒன்றையும் சந்தித்துள்ளது.
பேரழிவுகளில் இருந்து மீண்டு வரும் வன்னி மக்களின் அசைக்க முடியாத மன உறுதி, அவர்களின் எதிர் காலத்திற்கான நம்பிக்கையாகத் திகழ்கிறது. வன்னியின் சரித்திரம், இலங்கைத் தீவின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மறக்க முடியாத ஒரு முக்கிய பகுதியென்பதில் ஐயமில்லை
இலங்கைத் தீவின் பூர்வகுடிகளில் முதன்மையான சமூகமாகத் திகழும் ஈழத் தமிழர்கள், தமக்கெனத் தனித்துவமான மொழி, பண்பாடு, சமயம் மற்றும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள்.
அவர்களின் வரலாறு, தீவின் வரலாற்றோடு இரண்டறக் கலந்துள்ளது. தொன்மையான குடியேற்றங்கள், புகழ்பெற்ற இராச்சியங்கள், குடியேற்றவாத ஆட்சிகளின் கீழ் ஏற்பட்ட மாற்றங்கள், சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் போராட்டங்கள் என இலங்கைத் தமிழரின் வரலாறு பல பரிமாணங்களைக் கொண்டது.
இலங்கையில் தமிழரின் இருப்பு என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது. தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான குறுகிய கடல் வழி, வரலாற்றுக் காலம் முழுவதும் மக்கள், பண்பாடு மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது. இலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் போன்றோருடன் தமிழர் கலந்து வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
கந்தரோடை, பொம்பரிப்பு, ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள், தென்னிந்தியாவின் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய நாகரிகம் இலங்கையின் வட பகுதியில் நிலவியதை உறுதி செய்கின்றன. ஆனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரையில் “கோவேத” என்ற பெயர் காணப்படுவது, அக்காலத்திலேயே ஒரு தமிழ் ஆளுகை இருந்ததற்கான சான்றாகக் கருதப்படுகிறது.
மகாவம்சம் போன்ற சிங்கள வரலாற்று நூல்களே கூட, துட்டகைமுனுவுக்கு முன்பே எல்லாளன் என்ற தமிழ் மன்னன் அனுராதபுரத்தை 44 ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிடுகின்றன. இது, தீவின் அரசியலில் தமிழரின் ஆரம்பகாலப் பங்களிப்பை நிறுவுகிறது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் எழுச்சி (கி.பி. 13 – 17 ஆம் நூற்றாண்டு) கலிங்க மாகனின் படையெடுப்பைத் தொடர்ந்து, 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் ஒரு பலமான தமிழ் இராச்சியம் உருவானது. ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தினரால் ஆளப்பட்ட இந்த யாழ்ப்பாண இராச்சியம், ஒரு சுதந்திரமான அரசாக சுமார் 400 ஆண்டுகள் நிலைபெற்றது. நல்லூர் அதன் தலைநகராக விளங்கியது.
இந்த இராச்சியம் தனக்கெனத் தனித்துவமான நிர்வாக முறை, வரிவிதிப்பு, மற்றும் இராணுவத்தைக் கொண்டிருந்தது. முத்து மற்றும் யானை வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது. இக்காலத்தில் தமிழ் மொழி, சைவம், மற்றும் கலைகள் பெரும் வளர்ச்சி பெற்றன. பல கோவில்கள் கட்டப்பட்டன, இலக்கியங்கள் ஆதரிக்கப்பட்டன.
யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சி, 1619 இல் போர்த்துக்கேயரின் படையெடுப்புடன் நிகழ்ந்தது. இது இலங்கைத் தமிழரின் அரசியல் இறையாண்மைக்கு ஏற்பட்ட முதல் பெரும் அடியாகும்.குடியேற்றவாதக் காலம் (கி.பி. 1619 – 1948)போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், மற்றும் ஆங்கிலேயர் என மூன்று ஐரோப்பிய சக்திகளின் ஆட்சியின் கீழ் இலங்கைத் தமிழர் பல மாற்றங்களைச் சந்தித்தனர். இவர்களின் காலத்தில், தமிழர்களின் பாரம்பரிய சமூக மற்றும் சமயக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டன. பல இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு, மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.
1796 இல் கரையோரத்தையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றிய ஆங்கிலேயர், 1803 இல் பண்டார வன்னியனின் கீழிருந்த வன்னி பிரதேசத்தையும் சூழ்ச்சியால் கைப்பற்றி, இறுதியில் 1815 இல் முழுத் தீவையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
இது பல நூற்றாண்டுகளாகத் தனித்தனியே இயங்கி வந்த தமிழ் மற்றும் சிங்களப் பிரதேசங்களை ஒன்றிணைத்தது. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கல்வி முறை, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரிகளால் நிறுவப்பட்ட பாடசாலைகள், தமிழர்கள் மத்தியில் கல்வியறிவை வளர்த்தன.
இதனால், ஆங்கிலம் கற்ற தமிழர்கள், குடியேற்றவாத அரசின் சிவில் சேவை மற்றும் பிற தொழில்முறைத் துறைகளில் அதிகளவில் இடம் பிடித்தனர். இது பிற்காலத்தில் இனங்களுக்கிடையேயான போட்டிக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இதே காலத்தில்தான், தேயிலை, கோப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கையின் மலையகப் பகுதிகளுக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் “மலையகத் தமிழர்” அல்லது “இந்திய வம்சாவளித் தமிழர்” என அழைக்கப்பட்டு, பூர்விக இலங்கைத் தமிழரிடமிருந்து வேறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
சுதந்திரத்திற்குப் பின்னரான காலமும் இன முரண்பாடுகளும்1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது, தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் கல்வியில் முக்கியப் பங்காற்றினர். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகள், தமிழர்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறிக்கத் தொடங்கின.
குடியுரிமைப் பறிப்பு (1948)
முதலாவதாக, மலையகத் தமிழர்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாடற்றவர்களாக்கியது.
தனிச் சிங்கள சட்டம் (1956)
இதுவே இன முரண்பாட்டின் ஆணிவேராக அமைந்தது. தமிழ் மொழியின் அரச கரும மொழித் தகுதியை நீக்கி, சிங்களத்தை மட்டும் ஒரே ஆட்சி மொழியாக அறிவித்த இச்சட்டம், தமிழர்களின் வாய்ப்புகளைப் பறித்தது.
பல்கலைக் கழக தரப்படுத்தல் (1970)
பல்கலைக் கழகங்களுக்கு இனரீதியான தரப்படுத்தல் முறையைக் கொண்டு வந்ததன் மூலம், திறமையான தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அரசியல் தீர்வு முயற்சிகளின் தோல்வி
தந்தை செல்வா (S.J.V. செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசுக் கட்சி, சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்தி சாத்வீகப் போராட்டங்களை (சத்தியாக் கிரகம்) முன்னெடுத்தது. பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் போன்ற தீர்வு முயற்சிகள் சிங்களத் தலைவர்களால் கிழித்தெறியப்பட்டன.
ஆயுதப் போராட்டமும் அதன் விளைவுகளும்அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள், அரச வன்முறைகள் (1958, 1977, 1983 இனக் கலவரங்கள்), மற்றும் அமைதி வழிப் போராட்டங்களின் தோல்வி ஆகியவை தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்குத் தள்ளின.
பல ஆயுதக் குழுக்கள் தோன்றினாலும், ஒழுக்கமும், கட்டுக் கோப்பும் மிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு பிரதானமான சக்தியாக உருவெடுத்தது. 1983 இல் வெடித்த உள்நாட்டுப் போர், சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்து, 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது.
இந்தப் போர், இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு பெரும் துயர அத்தியாயமாகும். பல்லாயிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், இடம்பெயர்ந்தனர், மற்றும் நாட்டை விட்டு வெளியேறினர். தமிழ்ப் பிரதேசங்களின் பொருளாதாரம், சமூகம் மற்றும் உள்கட்டமைப்பு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.
போர் முடிந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் இன்றும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ மயமாக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், மற்றும் நிலையான அரசியல் தீர்வு போன்ற கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இருப்பினும், இந்தப் பேரிழப்புகளுக்கு மத்தியிலும், இலங்கைத் தமிழ்ச் சமூகம் தனது தனித்துவமான பண்பாட்டையும், மொழியையும், அடையாளத்தையும் பேணிப் பாதுகாத்து, தமக்கான அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து உள்நாட்டிலும், உலக அரங்கிலும் போராடி வருகிறது.
இலங்கைத் தமிழரின் வரலாறு என்பது, ஒரு இராச்சியத்தை நிறுவி ஆண்ட பெருமையுடன், அந்நியர் ஆட்சியில் உரிமைகளை இழந்து, சுதந்திர நாட்டில் சொந்த சகோதரர்களாலேயே ஒடுக்கப்பட்டு, ஒரு கொடிய போரைச் சந்தித்து, அதிலிருந்து மீள முயலும் ஒரு நீண்ட, சிக்கலான பயணமாகும்.
அவர்களின் எதிர்காலம், இலங்கையில் உண்மையான நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டும் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைப் பொறுத்தே அமையும்.
தங்களின் தொன்மையான மரபைப் பாதுகாத்து, எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு பிரகாசமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதே இன்றைய ஈழத் தமிழ்ச் சமூகத்தின் முன் உள்ள பெரும் சவாலாகும்.
அரச திணைக்களங்கள் மற்றும் அரச அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின் அறிவித்தல்கள் அனுப்படுகின்றமை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர், மும்மொழிக் கொள்ளையைப் பின்பற்றுமாறு அனைத்து அரச அலுவலகங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
எனினும், கடந்த நாட்களில் அதனைப் பின்பற்றியிருக்கவில்லை என்றால் அது குறித்து ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
அதற்கமைய நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களிலும் வெளியிடப்படும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்பது தொடர்பில், தாம் பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு விநியோகத்தில், தகுதியானவர்கள் புறக்கணிக்கப் பட்டாலோ அல்லது தகுதியற்றவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலோ, அதற்கு அரச அதிகாரிகளே பொறுப்புகூற வேண்டும் என யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் யாழ் மாவட்ட செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட (முற்றிலும் சேதமடைந்த, பகுதி சேதமடைந்த, அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட) அனைத்து வீடுகளுக்கும் இந்த ரூபா 25,000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், கிராம மட்ட அலுவலர்கள் நேரடியாகப் பிரிவுக்குச் சென்று தரவுகளைப் பெற்றுக்கொள்வதைப் பிரதேச செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
எனினும், இதில் குளறுபடிகள் ஏற்படின் அதற்குப் பிரதேச செயலாளர் உட்பட குறித்த பிரிவுக்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ஆகியோர் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை இற்றைப்படுத்தி உறுதி செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும், மாவட்ட செயலாளரின் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என தெரிவித்து பெண்ணொருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
யாழ் சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்று (06) குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கசிப்பு தொடர்பான நீதிமன்ற பிடியாணை மூலம் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் யாழ் போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பில் யாழ் ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பும் வகையில் அவரின் சகோதரி கருத்து தெரிவித்திருந்ததாக குற்றஞ்சாட்டியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ஏழாம் திகதி கசிப்புடன் தொடர்புடைய வழக்கு ஒன்றுக்காக சிவராமலிங்கம் தர்சன் என்ற நபர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் இரவு 10:20 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையின் உள்ளே அனுமதிக்க முற்பட்ட பொழுது குறித்த நபர் (கசிப்பு சிக்) வலிப்பு காரணமாக நிலத்தில் விழுந்துள்ளார்.
இதன்பின்பு, சக கைதிகளினால் காப்பாற்றப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் முதலுதவி அளிக்கப்பட்டு சிறைச்சாலை வாகனம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன்பின்னர், ஒன்பதாம் திகதி சிகிச்சை முடிந்து வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மறுநாள் பத்தாம் திகதி காலை ஏழு மணியளவில் நோய் உபாதைக்கு உள்ளாகி நோயாளர் காவு வண்டி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அவரது சகோதரி முன்னுக்கு பின்னர் முரணனான தகவல்கள் மூலம் முதலில் காவல் துறையினர் தாக்கியதாகவும் மற்றும் சிறைச்சாலையில் தாக்கியதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.