Saturday, April 18, 2026
Huis Blog Bladsy 29

2025 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி; வெளியாகிய அறிவிப்பு..!

0

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை, நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பரீட்சைகள் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 27 ஆம் திகதி வரை பரீட்சைகளை நடத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சையை ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீடு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மன்னாரில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்..!

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது.

மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று (13) மாலை இடம்பெற்றது.

இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கல்வி வலய மாணவர்களின் நிலை,பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துரித நிவாரண மற்றும் இழப்பீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு புதிய காணியை பெற்றுக் கொள்ள அல்லது வீடு கட்டுவதற்கு தலா 50 லட்சம் ரூபா நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் கெளரவ என்.வேதநாயகன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் திலகநாதன், ரிஷாட் பதியுதீன் உட்பட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியாகிய முக்கிய அறிவிப்பு..!

0

2026 ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதியை ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது

குறித்த விடயத்தினை ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஓய்வூதிய சுற்றறிக்கை எண் 03/2025 மற்றும் Pen/Pol06/25-2024 மூலம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது திறைசேரியின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி,

2026 ஆம் ஆண்டு

ஜனவரி 09
பெப்ரவரி 10
மார்ச் 10
ஏப்ரல் 09
மே 08.
ஜூன் 10
ஜூலை 10
ஆகஸ்ட் 10
செப்டம்பர் 10
அக்டோபர் 07
நவம்பர் 10
டிசம்பர் 10

ஆகிய திகதிகளில் ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை; வெளியாகிய அறிவிப்பு..!

0

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ் பல்கலைக் கழக புவியியல் துறை தலைவர் பேராசிரியர் நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று (நேற்று) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானிலை சீரான நிலைமையில் காணப்படும்.

எனினும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்பொழுது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதேபோல மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாண பகுதிகளில் அவ்வப்பொழுது மழை கிடைக்கும் சாத்தியமுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 16 ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சிறிய அளவிலான காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வடக்கு,கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மாகாணங்களில் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பக்கத்து வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற குடும்பப் பெண் சடலமாக மீட்பு..!

0

திருகோணமலை சலப்பையாறுப் பகுதியில் வீதியோரத்தில் இன்று (12.12.2025) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குச்சவெளி சலப்பையாறுப் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி செல்வராஜா (வயது- 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பக்கத்து வீட்டுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கணவர் தேடிச்சென்ற போது வீதியோரத்தில் குளிர் காரணமாகக் குடும்பப் பெண் போர்த்திச் சென்ற பெட்சீட் வீதியோரத்தில் இருந்துள்ளது.

சற்றுத் தூரத்தில் அவர் வீசி எறியப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இடத்தில் தடயப் பொருட்களாகக் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டது.

விபத்து இடம் பெற்றதையடுத்து விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

விபத்துத் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் குச்சவெளிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் அனலைதீவில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்..!

0

அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று (12) நாலை 5.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனலைதீவு, 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சுப்பையா நளினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டில் தொடரும் அசாதாரண வானிலையை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகளும் நிரம்பி இருக்கின்ற சூழலில் இவ்வாறு நிகழ்ந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் உறவினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

அவசர காலச் சட்ட ஏற்பாடுகள் இதுவரை தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை..!

0

அவசரகால சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

“அனர்த்த நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை” எனவும் அவர் கூறினார்.

எனினும், அவசரகால சட்டம் ஒடுக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என எதிரணி குற்றஞ்சாட்டி வருகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது இக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.

அதேவேளை, “அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம்.” எனத் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் திலைக்சன் உயிரிழப்பு.!.

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் கடந்த 09.12.2025 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த 9 ம் திகதி 31 வயதான இரணைப்பாலையினை சேர்ந்த அன்ரன் செல்வராசா திலைக்சன் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனத்தில் மோதி விபத்தினை சந்தித்துள்ளார்.

காயமடைந்த குறித்த குடும்பஸ்தர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 12.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய கனரக வாகனமும் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு வீதி போக்குவரத்து பொலீசாரால் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சாரதி கைது செய்யப்பட்டு 10.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குறித்த சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

இந்த வழக்கு விசாரணை 13.01.2026 அன்று திகதியிடப்பட்டுள்ளது.

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூன்று நாள் மருத்துவ முகாம்..!

0

மன்னார் மாவட்டத்தில் சமீபத்தில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அரசு கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மூன்று நாள் மொபைல் கால்நடை மருத்துவ முகாமை ஆரம்பிக்க இருப்பதாக சங்கத் தலைவர் டாக்டர் உபல ரஞ்சித் குமார குறிப்பிட்டார்.

இந்த திட்டம் விவசாயம், கால்நடை, நில மற்றும் பாசன அமைச்சு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் (DAPH) மற்றும் அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.

“மன்னாரின் பல கிராமங்களுக்கு எட்டு குழுக்கள் அனுப்பப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பண்ணைகளை கண்டறிந்து சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருமாறு அறிவிப்புகள் மூலம் தகவல் வழங்கப்படும்,” என டாக்டர் குமார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளத்தால் மேய்ச்சல் நிலங்கள் நீரில் மூழ்கியதால் கால்நடைகளுக்கு தீவனக் குறைப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க 250 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் ஏற்கனவே மன்னாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

“இந்த தீவனம் நிலைமைகள் சீராகும் வரை விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பராமரிக்க பெரிதும் உதவும்,” என்றார்.

புத்தளம் மாநகர சபையில் NPPயின் வரவு செலவுத் திட்டம் தோல்வி..!

0

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 12 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, ஆதரவாக 7 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஓர் உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக்கொண்டதுடன், இதற்கமைய புத்தளம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.

மாநகர முதல்வர் எம்.எஃப். ரின்ஸாத் அஹமட், வரவு செலவுத் திட்ட அறிக்கை முதன்முறையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அது தோல்வியடைந்தது.

இதனையடுத்து, மாநகர முதல்வர் எம்.எஃப். ரின்ஸாத் அஹமட் சபையை நாளை வரை ஒத்திவைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.

எனினும், இது மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்திற்கு முரணான செயற்பாடு எனவும், சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டு, 12 மாநகர சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று மாநகர சபை செயலாளர் ஊடாக மாநகர முதல்வரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!